Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

எதிர்காலத்தில் மூளப்போவது நீருக்கான போர்!

உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல.

உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை.

என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன.

பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அளவுக்கு சூழல் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.சூழலில் உள்ள மரம், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு வெறுமையான சூழலுக்குள் மனிதர்கள் விரும்பியே விழுந்து கொண்டுள்ளனர். அதன் பிற்பாடு ஏற்படுகின்ற சூழிலியல் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

காடுகளை அழித்து வீடுகளை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு, சூழல் தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது. காடுகளில் வாழ்கின்ற விலங்குகள், ஊர்வன வீடுகளைத் தேடி வரத் தொடங்கின. யானைகள் வெகுவாக உயிர் இழப்புகளுக்கு ஆளாகின. இதனால் காடுகளின் பரப்பு குறையத் தொடங்கிற்று.

இந்த சூழலின் சமநிலைப் பாதிப்பு பற்றி எவரும் சிந்திக்கத் தயாரில்லை. தாம் வாழ்கின்ற சூழலே இவ்வாறெனில், தமது சந்ததிகளுக்கு எதனை விட்டுவிட்டு செல்லப் போகின்றோம் என்றும் மனிதன் நினைப்பதாயில்லை.





விடயம் இவ்வாறிருக்க, நீருக்கான கேள்வியும் அதனை விட பல்மடங்காகியுள்ளது. முன்னொரு காலத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறு என வழிகளிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை மிகச் சுலபமாக, இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் சூழலை துவம்சம் செய்து நீர்நிலைகளை அழித்து வாழ்விடங்களை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு இன்று பணம் கொடுத்து நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு தேசத்தில் வரட்சி நிலவுவதற்குக் காரணம் அங்குள்ள இயற்கைச் சமநிலையில் ஏற்படுகின்ற மாற்றமே. இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த எழில்மிகு தேசம். அவ்வாறிருக்ைகயில் வரட்சி எங்கிருந்து வந்தது? எப்போது காடுகளை அழிக்க முற்பட்டனரோ அன்றே வரட்சி வாட்டி வதைக்கத் தொடங்கிற்று. காடுகளில் உள்ள குளங்கள், ஏரிகளும் சேர்த்தே நாசம் செய்யப்பட்டன.

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத்தான் மற்ற உபயோகங்களுக்கான தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை மக்கள் பயன்படுத்தினார்கள். இது 1980இல் 45சதவீதமாகவும், 1990இல் 65சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை மொத்த நீரில் 80சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது.

நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள்தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள்,இரசாயனப் பொருட்கள், எண்ணெய்ப் பதார்த்தங்கள்,வர்ணங்கள் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கைத் தன்மையே மாறுகிறது. வீட்டுக் கழிவறைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது.

இன்றைய காலத்தில் பணம் இருந்தும் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத சிக்கல் நிலை உள்ளது. பூமி 71சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த நீரில் உப்பு நீரே அதிகம். 2.5சதவீதம் நீர் மட்டுமே நன்னீர். உலகில், 0.08சதவீதத்துக்கும் குறைவான நன்னீரை மட்டுமே மனிதனால் பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50நாடுகளை 1999இல் ஐ.நா அறிவித்தது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. நீரைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரினதும் கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த நாடுகள் முன்வர வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம், நீர்த்தெளிப்பு போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்கும் திட்டங்கள் கிராம மட்டங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்படுதல் அவசியம்.
Read more »

இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய உரிமைகள்


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது.

'ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது' என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும்' என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள்' (புகாரி, அஹ்மத்)

'ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத – தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க வலி| முனைகின்ற போது அதனை மறுக்கின்ற – நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது வலி| ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும்.

Read more »

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு! எம்.வீ. பாத்திமா ஹப்ஸா சலாஹிய்யா சர்வதேச பாடசாலை, வெலிகம.


ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்' என நபிகளார் தெரிவுத்துள்ளார். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை 'ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு' என்ற வரிகளின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இதனால் வாராந்தம் நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயலவேண்டும்.

 ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபிகளார் (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:





'ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்'. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள் அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செ;யது, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும். ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Read more »

சதந்திரனில் முதல் முதலில் காலடி வைத்ததாக கூறி ஏமாற்றி இன்றுடன் 50 வருடங்கள்

GPS உட்பட குறிப்பிடத்தக்க எந்தவொரு தொழிநுட்பமும் இல்லாத இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் (20.07.1969) அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்றோங்க் சகோதரர்கள் சந்திரனில்  முதன்முதலாக காலடி வைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பான புகைப்படங்களும் அபோது வெளியிடப்பட்டு பாட புத்தகங்களிலும் அது பதிவாகி கற்பிக்கப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 384400 km தொலைவிலுள்ள சந்திரனில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் காலடி வைக்க முடிந்த அமெரிக்க விஞ்ஞானத்தால் அதி நவீன தொழிலுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில் கட்டத்தில் அதே சந்திரனில் நேரடியாக தரையிறங்கி அதில் இருப்பது மண்ணா, கற்பாறையா, வெள்ளியா தங்கமா என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இன்னும் சொல்லப்போனால் சந்திரனில் இருந்தல்ல சந்திரனுக்கு அப்பால் ஒரு 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தேனும் சந்திர மண்டலத்தை குளோஸ்அப் படம் பிடித்து காட்ட முடியவில்லை.

விண்வெளியில் வைத்து அதிநவீன கமெராக்கள் மூலம் பிடித்த படங்களையே இன்னும் எடிற் செய்து கண்பித்து கொண்டிருக்கிறார்கள்.

தனது ஆளுமையை அல்லது வல்லரசை உலகுக்கு பறைசாற்ற இதுபோன்ற திட்டமிடப்பட்ட கதைகளை விஞ்ஞானத்தின் பெயரால் கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

அப்போது விட்ட கதை போன்று இப்போதும் ஒரு புதிய புதிர் விடப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகிலுள்ள சந்திரனை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாத விஞ்ஞானம் சந்திரனையும் தாண்டி சுமார்  54.6 மில்லியன் km தொலைவிற்கு அப்பாலுள்ள செவ்வாய் கிரகத்தில் மிக விரைவில் மனிதனை குடியேற்ற போவதாக அறிவித்திருப்பதுதான் மற்றுமொரு புதிர்.

துல்லியமான பல கணிப்புக்களை விஞ்ஞானம் கண்டிருந்த போதிலும் பல புதிர்களுக்கு இதுவரை விடை காணவே முடியவில்லை.

54.6 மில்லியன் km தொலைவிற்கப்பால் உள்ள செவ்வாய் கிரகத்தை அணுகி  ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இங்கு பூமியின் சிறியதொரு பரப்பில் பயணிகளுடன் பறந்து காணாமல் போகும் பல விமானங்களை இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுவும் பாரிய பலவீனம்தான்.

கடந்த சில வருடத்திற்கு முன்னால் ஒரு சில ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து சுமார் 200 பேருடன் காணாமல் போன மலேசிய விமானத்தை அதிநவீன தொழினுட்பங்களுடன் வருட கணக்கில் தேடுதல் நடத்தியும் இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அது கடலில் விழுந்ததா? காட்டிற்குள் விழுந்ததா என்பதை கூட விண்வெளியில் விடப்பட்டிருக்கும் சட்லைட்கள் மூலமேனும் கண்டு பிடிக்க முடியாமல் போனது பெருத்த பலவீனமாகும்.

நில அதிர்வுகள் ஏற்படும் வரையில் அது பற்றி விஞ்ஞானத்தால் எதிர்வு கூறவே முடியாது!

சுனாமி எங்கு எத்தனை மணிக்கு தாக்கும் என்பதையும் துல்லியப்படுத்த முடியாது.

இவ்வளவு நவீன காலத்தில் இத்தனை பலவீங்களை வைத்துக்கொண்டு நவீனமே இல்லாத 50 வருடங்களுக்கு முன்னால் சந்திரனில் கால் பதித்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்ததாக அமெரிக்கா விட்ட கதையை எந்த விஞ்ஞானத்தை வைத்து ஏற்றுக்கொள்வது??

-Almashoora Breaking News
Read more »

தென்மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்று வரும் அராஜகங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தென்மாகாணத்திற்கான தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகள், பிரயோகப் பரீட்சைகள் நடைபெற்று முடிவடைந்தன நியமனக் கடிதங்கள் எப்போது தான் கிடைக்கப் பெறுமோ என்று ஆவலுடன் காத்திருந்த பட்டதாரிகள் பலரது கனவுகளுக்கு முடிச்சுப் போடும் விதமாகக் கிடைத்தது அந்தச் செய்தி. ஆரம்பக்கல்வி, தமிழ் பாடங்களுக்கு மாத்திரமே அதிகமான பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படுவர் என்பதோடு இன்னும் சில பாடங்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படும் என்பதே இதன் மூலம் தெரிய வந்தது மீண்டும் இன்னொரு பரீட்சையை கூடிய சீக்கிரமே எதிர்பாருங்கள் என்பதே! ( பின்னர் அதுவே உறுதிப்படுத்தப்பட்டது)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த (அ)நீதி தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு மட்டுந்தான் என்பது தான். 2014 ஜனவரி க்குப் பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்நியமனத்தில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன்னொரு அதிசயமும் இடம்பெற்றது வயதில் கூடிய பட்டதாரிகளை அதிகமாக உள்ளீர்க்காமல், இன்னும் பட்டமளிப்பு விழா கூட நிறைவுறாத புதிய பட்டதாரிகளை உள்ளீர்த்தமையாகும். இதன்மூலம் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதை பிழை காண வரவில்லை. அவர்களுக்கு அள்ளாஹ்வினால் நியமித்த நேரம் வர, அவர்களுக்குரியது கிட்டி விட்டது. ஆனால், வருடக்கணக்கில் காத்திருந்தவர்களின் நிலை?? இன்று நாதியற்ற நிலையில் இருக்கின்றனர். பலரது சொல்லம்புகள் அவர்களைப் பதம் பார்த்து வருகின்றன இதற்கு முன்னரும் கூட தென்மாகாணத்தில் பல தடவைகள் மிகச் சூட்சுமமான முறையில் தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் இவ்வாறான அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் இடம்பெற்றுள்ளன. ( அதற்கு வழக்கை காரணம் காட்டி மறுத்தது வேறு கதை) தட்டிக் கேட்க நாதியற்றவர்களா நாங்கள் என்று தம்மைத் தாமே கேள்வி கேட்கும் துர்ப்பாக்கியமான நிலை தான் இன்று தென்மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது!ஏனைய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமைக்கான காரணமாக வெற்றிடங்கள் எதுவும் காணப்படவில்லையென்று தக்ஷினபாயவினால் காரணம் கூறப்பட்டது. (தென்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை எவ்வாறு கணக்கெடுக்கின்றார்கள் என்பது தக்ஷினபாயவில் உள்ள அதிகாரிகளுக்குத் தான் வெளிச்சம்.)

கடந்த 15ம் திகதி நடைபெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் விழாவில் கருத்துத் தெரிவிக்கையில், " தென்மாகாணத்தில் இருப்பவர்கள் வழக்குத் தொடுப்பதில் மிகவும் திறமைசாலிகள்! தென்மாகாண சபைக்கெதிரான எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் தென்மாகாண மாணவர்களுக்கு பாரிய அநியாயம் நிகழ்ந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் இனிமேல் இடம்பெறலாகாது. நான் பட்டதாரிகளுக்கு இந்நியமனத்தை வழங்கியதன் மூலம் அவ்வராலாற்றுத் தவறை நிவர்த்திக்க முயற்சி செய்துள்ளேன்" என்று கூறினார். கனம் ஆளுநர் அவர்களே! அவ்வரலாற்றுத் தவறு நீங்கள் நினைப்பது போல் சரிசெய்யப்பட வேண்டுமென்றால், அனைத்துப் பட்டதாரிகளையும் நீங்கள் உள்ளீர்த்திருக்க வேண்டும். குறைந்தது, வயதில் கூடிய பட்டதாரிகளுக்காகவது நீங்கள் நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அப்போது நீங்கள் கூறிய அவ்வரலாற்றுத் தவறு ஓரளவாவது சீர்பெற்றிருக்கும்

கொஞ்சம் கூட நியாயமற்றதாக தோன்றுகின்ற இந்த நியமனம் தொடர்பில் சரியான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அரச அதிகாரிகளை அணுகி இது பற்றி வினவிய போது அவர்கள் கூறியது என்னமோ இப்படித் தான்,

"அய்தான் பாருங்களே, ஒருத்தரும் இதப் பத்தி பெய்த்து பேசுறாங்க இல்லையே. பிரின்ஸிபால்மார்ட செல்லி பெய்த்து பேசுங்களே! இல்லாட்டி நீங்க ஊராக்கள் பெய்த்து பேசுங்களே! இப்ப bomb blast க்குப் பொறகு எங்களுக்கு தென ஒண்டு இல்லே ஒபீஸ்ல...

"அட, பேச வேண்டிய ஆளே நீங்க தானே, நீங்களே இப்படி மத்தவன் மேல பொறுப்ப தள்ளி விட்டுட்டு இருந்தா செரியா?" என்று மனசு கேட்க நினைத்தாலும் தத்தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள தான் இவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனித்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளாமல் இல்லை! என்ன இருந்தாலும் அவனவனுக்கு அவனவன் ஜாப் முக்கியமில்லையா? 20ந் தேதிக்கு சம்பளக் கவர் கிடைச்சாத் தானே குடும்பத்துக்கே சோறு! அவங்க சொல்றதும் வாஸ்தவந்தானே!

அரசியல் சப்போர்ட் இல்லாமல் இவற்றிற்கு எதிராக போராடுவதென்பது மிக மிகக் கஷ்டந்தான் என்பது தான் அநேகருடைய கருத்தாகவும் இருக்கின்றது! அது ஒருவகையில் உண்மையும் தான். சிலவேளைகளில் அவ்வதிகாரங்களும் சாத்தியமற்றவை தான். தேர்தல் காலங்களில் களத்திலிறங்குகின்ற நம் வேட்பாளர்களும் செல்லாக்காசுகளாகி விடுகின்றனர். நாம் தட்டிக் கேட்கவோ, உரிமைகளை வென்றெடுக்கவோ நாதியற்றவர்கள் தான்.

இந்நிலையில் நியமனம் கிடைக்கப் பெறாத அத்தனை பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். இன்னும் ஒன்றரை மாதங்களில் நான் அவர்களுக்கு நியமனம் வழங்குவேன் என கடந்த மாதம் 15ம் திகதி நடைபெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் ஆளுநர் வாக்களித்தார். அதற்கொப்ப, நேற்றைய தினம் (2019.07.13) பரீட்சை நடைபெற்றது.

உண்மையிலேயே, அந்தப் பரீட்சைக்குரிய வினாக்களைப் பார்க்கையில், அது பட்டதாரிகளை தோற்றுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா? தோற்றாமலிருப்பதற்காக தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரமா என்ற சந்தேகத்தையே தோற்றுவித்தது. ஏனெனில், அந்தளவுக்கு வினாப்பத்திரத்தின் அமைப்பு அமைந்திருந்து.

1.பந்தி பந்தியாக அமைந்திருந்த வினாக்களை வாசித்து விடை எழுதுவதற்குரிய கால அவகாசம் போதாமலிருந்தமை.

2. மொழிபெயர்ப்புக் குளறுபடி

இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் எல்லோருக்குமே நியமனம் கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லையாம். யார் அதிகூடிய புள்ளிகளைப் பெறுகின்றார்களோ, அவர்களுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படும் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.( பாடங்களுக்கான ரீதியில் என்றில்லாமல் பொதுவாக பரீட்சையில் சித்தியடைந்த அத்தனை பேருக்கும் நியமனம் வழ்ங்கப்படும் என்று ஒரு தகவலும் கசிந்தது. ஆனால், அத்தகவல் எவ்வளவு தூரம் உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.)

பரீட்சை நிறைவடைய, ஒரு ஆசிரியனாக தன் கனவை எட்டிவிடலாம் என தவிப்புடன் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இப்பரீட்சை நியாயம் செய்யவில்லை.

ஆக, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுந்த தீர்வொன்றைப பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.

Shazna Nazim
Read more »

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.?

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.

உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும்  சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்?  மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் மனிதனால் அது முடியும், அவன்  வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா"  திரவத்தினால் தான். 

ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

காது கேட்பதற்கும்  காக்லியா திரவம்  உதவுகிறது,  ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

 10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

 முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.

#அழகிய_படைப்பாளன்_இறைவன் ❤

Read more »

முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.









WeligamaNews
www.weligamanews.com


Read more »

தளபதியின் 63’வது படத்தில் 16 நடிகைகள்?


‘தளபதி விஜெயின் 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இவ் வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி விரைகிறது படக்குழு.

இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் தளபதி 63கதை என்னுடைய குறும்பட கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வந்து சர்ச்சை எழுந்தது. அப்போது படக்குழு தொடர்ந்து 70நாட்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது. அட்லி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிக்கும் இந்துஜா, “நான் நடிகர் விஜயை பார்த்தேன்” என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்துஜாவுடன் ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.
Read more »

புனித ரமழானை வரவேற்போம்


"புனித ரமழான் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

பாவமன்னிப்பு, ஷபா அத்துடைய மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

குர்ஆனுடைய மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்.

கொடை கொடுக்கும் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

ஈடேற்றம் தரும் மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்."

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண் அகிய இரு பாலார் மீதும் கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போம்.

அல்லாஹ் கூறுகிறான், - விசுவாசிகளே! நீங்கள் இறையச்சமுடையோராக மாறுவதற்கு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன் 2:185)

ரமழான் மாதம் நோன்பு நோற்பது கட்டாய கடமை என்று இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந் நோன்பு கடமையாக்கப்பட்டதாகவும் இவ்வாறு நோன்பு நோற்பதால் இறையச்சமுடையோராக ஆகமுடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

நாம் பக்குவப்படுவதும் இறையச்சமுடையோராக ஆக முடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.





உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. பசி எத்தகையது என்பது உணரப்படுகிறது.

இவ்வாறு சிலர் காரணம் கூறுவர்.

நோன்பினால் இந்தப் பயன்களெல்லாம் இருக்கலாம். இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்களும் இந்த நோக்கத்தை விளக்கியுள்ளார்கள். யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புஹாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டால்தனமாக நடந்தால் நான் நோன்பாளி என்று கூறிவிடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் திர்மிதி எனவே, எம்மை அண்மித்துள்ள புனிதமான றமழான் மாதத்தில் பயன்களை உணர்ந்து நல்ல முறையில் நோன்பை நோற்க வல்ல இறைவன் அனைவருக்கும் கிருபை செய்வானாக.



கலாபூசணம் எம். எஸ். எம். ஹாரிஸ் (கபூரி)
Read more »

நடிகர் கார்த்திக்குக்கு அக்காவாகும் அண்ணி ஜோதிகா


தமிழில் பாபநாசம் படத்தை நடிகர் கமலை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து நடிகர் கார்த்திக், ஜோதிகா வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் தமிழில் அவருக்கு இது இரண்டாவது படம். இன்னும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை, சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் றித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்றார்.
Read more »

முஸ்லிம் பெற்றோர்களே இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை கட்டாயம் வாசியுங்கள்

இரத்தக்காட்டேறித்தனம் இலங்கைக்குள் தனது நோக்கங்களை அடைந்து கொள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர் கூட்டமொன்றை நன்றாக பயன்படுத்தி விட்டது. தொடர்ந்தும் பயன் படுத்தும்.


இலங்கை வளங்களை சூரையாடுவதில் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாலித்துவத்திற்கும் இடையில் உண்டாகியுள்ள நீயா, நானா சமரின் கோரத் தாண்டவமே 21ஆம் திகதி இலங்கையை நாசப்படுத்திய இரத்தக் காட்டேறித்தனமாகும்.


பாதுகாப்புத்துறையில் இடம்பெற்றுள்ள பலவீனத்தை தனது பிரச்சாரத்திற்கு ஏதுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ள குள்ளநரிக் கூட்டமானது அதிகாரத்தையும், ஆட்சி பீடத்தையும் குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.


கொலையுண்டோர் பட்டியலை நன்றாக அவதானித்தீர்களா? பெளத்தம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அறவே சம்பந்தமற்ற கிரிஸ்தவம் பல நூறு உயிர்களை பறிகொடுத்துள்ளது? இஸ்லாம் பழிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளது. மர்மமொன்று புதைந்திருப்பதும் பூதமொன்று ஒழிந்திருப்பதும் புலப்படவில்லையா உங்கள் சிந்தனைக்கு?


இலங்கையில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி, பஞ்சமாபாதகத்தை செய்து, இரத்த குளியலில் மூழ்கியுள்ள ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் உள் வீட்டு குள்ளநரிக் கூட்டமும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு கணிம வளமும், இன்னுமொன்றிற்கு கேந்திர நிலையமும் மற்றையதிற்கு ஆட்சி அதிகாரமும் தேவைப்படுகின்றன.


ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் இலங்கைக்குள் தமக்கு வேண்டியதை முழுமையாக அடைந்து கொள்ளும் வரை ஓயப்போவதில்லை. முஸ்லிம் வாலிபர்களை பயன்படுத்தி இலங்கைக்குள் இன்னுமின்னும் இரத்தம் குடிக்க முனைவர். வாலிபர்களே! அன்பான இஸ்லாமிய இளசுகளே! தூண்டல்களுக்குள் மாட்டுண்டு துயரில் விழிந்து விடாதீர்கள்.


30 வருட கொடூர யுத்தத்தின் போது கொழும்பில் உலக வர்த்தக மையம் குண்டு வெடிப்புக்குள்ளானது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தகர்க்கப்பட்டது, தலதா மாலிகை இலக்கு வைக்கப்பட்டது, காத்தான்குடி பள்ளிவாசலில், ஏராவூரில், வடக்கு தமிழர்களுக்கிடையில், ஆனையிறவு முகாமில் என எத்தனையாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன ? எமக்காக போராடிய பல ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் மாண்டு போயினர். அப்போதெல்லாம் 30 வருடங்களாக இலங்கையை அறவே கண்டுகொள்ளாத ஏகாதிபத்தியத்தின் உளவுப்பிரிவுகள் 21ம் திகதி குண்டுகள் வெடித்த போது 22ம் திகயே இலங்கைக்குள் ஏன் நுழைய வேண்டும் ?


பின்னால் மறைந்துள்ள மர்மங்கள் பல.....


ஏன் எமது இஸ்லாமிய மடையர் கூட்டம் பழிக்கடாவாக்கப்பட வேண்டும்?


அப்பாவி முஸ்லிம் வாலிபர்களே! ஏமார்ந்து போகாதீர்கள். நீங்கள் விழிப்படையாவிடின் இவர்களின் நரபலி விளையாட்டில் வெடி குண்டுகளாக வெடித்துச் சிதறி உங்கள் இன்மை, மறுமை வாழ்கையை பாழ்படுத்திக் கொள்வது மட்டுமே மிஞ்சப் போகின்றது.


பெற்றோர்களே!


பாதுகாவலர்களே!


உங்கள் பிள்ளைகள் மூளைச் சலவைக் காரர்களின் கரங்களில் இலகுவாக சிக்கிக் கொள்வது மிகப்பெரும்பாலும் இரண்டு சந்தர்ப்பங்களில் தான்.


(01) உங்கள் வாலிபப் பிள்ளைகள் உயர் கல்வி, தொழில் என்ற பெயர்களில் முதலாம் உலக நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் வாழ்ந்து வரும் காலம். இதில் எல்லா வாலிபர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாது. இருந்த போதும் பல வாலிபர்கள் அந் நாடுகளில் வைத்து மூளைச்சலவைக்கு உற்படுத்தப்பட்டே பயங்கரவாதத்திற்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரியாக வெடித்துச் சிதறிய ஸஹ்ரான் ஹாஷிம் மத்திய கிழக்கில் தொழில் புரிந்தவன். அவனை போலவே வெடித்துச் சிதறிய தெமட்டகொட இப்ராஹிம் ஹாஜியாரின் மகன்கள் இருவரும் UK பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர்.


(02) பூட்டிய அறைக்குள் உங்கள் வாலிப ஆண்/பெண் பிள்ளைகள் அடைந்து கொண்டு இணையத்தில் (Internet) சங்கமித்துத் கொண்டிருக்கும் தருணங்கள்.


பெற்றோர்/ பாதுகாவலர்களாகிய உங்கள் கடுமையான கண்கானிப்பின் கீழ் அவர்கள் வந்தாக வேண்டும். போலீஸ் காரனாக செயற்பட்டு அவர்களை அவதானித்து வாருங்கள். இல்லையேல் போலீஸ் வந்து உங்கள் பிள்ளைகளையும் உங்களையும் அள்ளிச் செல்வது நிச்சியம்.


நாட்டில் சமாதானம் நிலவட்டும், அனைத்து இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்படட்டும், எமது இலங்கையில் எமக்கு மீண்டும் அமைதி வேண்டும். அள்ளாஹ் துணை நிற்பானாக.


அபூ அஹ்மத்.


29/04/2019.
Read more »