எதிர்வரும் 26, 27 திகதிகளில் அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை.


(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கையில் நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில்
அதிபர் ஆசிரியர்கள் - சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விரு நாட்களும் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் - ஒன்றுபட்டு தமது உரிமைக்காக செயற்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சுகயீன லீவை - சுகயீன லீவை எடுக்கும் நடைமுறையை பின்பற்றி திணைக்கள தலைவருக்கு கட்டாயம் அறிவித்தால் போதுமானது.

இந்த இரண்டு தினங்களிலும் - எவ்வித காரணங்களுக்காகவும் ஆசிரியர்களோ அதிபர்களோ எந்தவொரு அதிகாரிகளின் கட்டளைக்குப் பயந்தும், பணிந்தும் பாடசாலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.

இச் செயற்பாட்டின் முழுப்பொறுப்பையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் -
இரண்டு நாட்களும் பாடசாலை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதற்கு - தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும். எமது நியாயமான தொழிற்சங்கப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.

அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.
ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.
பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.


ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது
தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.
இவற்றிற்கு நாம் தீர்வுகாணவேண்டும்.
வெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் - எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த வகையில் -
அனைவரும் இணைந்து போராட்டம் வெற்றிபெற பலம்சேர்க்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments:

Post a Comment