Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

ஜனவரி 10இல் சந்திரகிரகணம்


Read more »

பெண்களும் ஆடைகளும்



Read more »

சிறுவர் தொழிலாளிகள் குறித்து விசேட கவனம்


Read more »

தர்பாரின் சும்மா கிழி




Read more »

குழந்தைகளைத் திட்டாதீர்கள்!


Read more »

கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்



Read more »

குணப்படுத்தக் கூடியதா மூலவியாதி?



Read more »

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்கவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின்
Read more »

நமது பெண்கள் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும், வாக்களிக்கச் செல்லாதிருப்பது பாரதூரமானது



"மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம்"
நாளை மறு­தினம் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­சாரப் பணிகள்
Read more »

பாலியல் உறவு மூலம் பரவிய டெங்கு தொற்று


உலகில் முதன் முதலாகப் பாலியல் உறவின் மூலம் டெங்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்குத் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது. அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் நுளம்புக் கடியின் மூலம் டெங்கு தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்குத் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கு அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்குத் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென் கொரியாவில் டெங்குத் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது. வைரஸ் தொற்றான டெங்கு ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பரவுகிறது.
Read more »

நம் கருமங்கள், எண்ணங்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா


நாங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு வகையிலான கருமங்களில ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இறைவணக்க வழிபாடுகளில் கலந்துகொள்கிறோம். எமது நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் உள்ளிட்ட பலருடன் பேசிப்பழகுகிறோம். அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்கிறோம். இப்படியாக நாம் நாளாந்தம் செய்யும் அலுவல்கள் யாவும் அல்லாஹ்வின் நல்லருளுக்கு உட்பட்டவைகளாக இருக்க வேண்டும்.

அதாவது நாம் செய்கின்ற செய்ய முற்படுகின்ற கருமங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையா இல்லையா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதன்பின் தான் நாம் செயல்களில் இறங்க வேண்டும். அல்லாஹ்வின் மேல் அச்சம் நிறைந்தவர்கள் நிச்சயம் இது விஷயமாகக் கவனம் செலுத்துவார்கள்.

நாம் அல்லாஹ்வுக்காக ஐந்துவேளை தொழுது வருகிறோம். எனினும் இவையாவும் உண்மையான இறைபக்தி இல்லாத நிலையில் ஏதோ கடமைக்காக செய்து வரக்கூடாது. அது அர்த்தமில்லாதது. நாம் தொழுகையில் ஈடுபட்ட போதிலும் இதுபோன்ற மற்றும் வணக்க வழிபாடுகளில் கலந்து கொண்ட போதிலும் அவையாவும் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றோம் என்ற பயபக்தி உள்ளத்திலே ஆழமாகப் பதிய வேண்டும்.

உள்ளத்திலே வெளிப்படும் எண்ணங்களை எல்லாம் மறந்து விட்டு அல்லாஹ்வின் அச்சம் கொண்டவர்களாக எமது வணக்க வழிபாடுகளை செயல்படுத்த வேண்டும்.

நாம் செய்கின்ற நல்ல கருமங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மையுண்டு. தீய கருமங்களுக்கு தண்டனையையும் உண்டு என்பதை நாம் நம்புகின்றோம். அதனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான அச்சம் கொண்டவர்கள் பாவங்கள் செய்வதற்கு முற்பட மாட்டார்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய்கூறுவது, பொய் சத்தியம் பண்ணுவது, பிறர் மனதை நோவினை செய்வது பிறர் பொருளை பறிப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, அநாதைகளின் சொத்துக்களை அநீதியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பாவமான காரியங்கள் செய்வதற்கு அல்லாஹ்வின் மீது அச்சம்- பயம் கொண்டவர்கள் கொஞ்சமும் முன்வர மாட்டார்கள்.

ஆனால், இன்று சமூகத்திலே நடப்பதென்ன? இதுவெல்லாம் எமது நீண்ட தூர சிந்தனைக்கு உட்பட்டதாகும். நாம் எவருக்கும் தெரியாமல் அநியாயங்கள் செய்யலாம். மற்றவர்கள் முன் நல்லவர் போல நடித்தும் விடலாம். எனினும் இந்தச் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வுத்தஆலா கவனிக்கின்றான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் நாம் எந்த வேளையிலும் அலலாஹ்வை நினைத்தவர்களாக அவன் மேல் அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒருமுறை கலீபா உமர் பாரூக் அவர்கள் ஒரு முக்கிய அலுவலக குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியிலே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அச்சிறுவனுடன் பேச நினைத்த கலீபா அவர்கள், சிறுவனிடம் வந்தார்கள். குதிரை மீது இருப்பவர் கலீபா உமர் என்பது சிறுவனுக்கு தெரியாது “தம்பி இவை யாருடைய ஆடுகள்; இவை எனது எசமானின் ஆடுகள். ஆடுகளில் ஒன்றை விலைக்குத் தருகிறாயா? இதனை உங்களுக்கு விற்க முடியாது; இவை என்னுடையதல்ல. எனது எசமானுக்குரியது. எனக்கு ஓர் ஆட்டை தந்து விடு. எஜமான் கேட்டால் ஓநாய் பிடித்து விட்டதாக சொல். பெரியவரே, நான் எஜமானரிடம் பொய் கூறி ஏமாற்றலாம். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை ஏமாற்ற முடியாதல்லவா? நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன். இந்தச் சிறுவனிடம் இத்தகைய அல்லாஹ்வின் மீது அச்சம் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். இதுதான் இறையச்சம். எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் இருக்கின்றதல்லவா?

எம். ஏ. அத்தாஸ்
மாத்தறை
Read more »

கற்பதும், கற்பிப்பதும் பர்ளு கிபாய

அறிவு எனும்போது அதனை உலக அறிவு, மார்க்க அறிவு எனும் இரு கூறுகளாக இஸ்லாம் பிரிக்கவில்லை. எமது சமூகத்தவர்கள் 'உலமாக்கள் என்று ஷரீஆ அறிவுகளைக் கற்றவர்களையும், கல்விமான்கள் என்று உலக அறிவுகளை- பொதுக் கல்விகளைக் கற்றவர்களையும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குர்ஆனிலோ, ஹதீஸிலோ இப்படியான பிரிவினையைக் காண முடிவதில்லை.

நபி(ஸல்) அவர்கள், கல்வியை ’பயனுள்ள கல்வி’, ’பயனற்ற கல்வி’ என்று மட்டுமே பிரித்திருக்கிறார்கள். ’அல்லாஹ்வே உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’’(முஸ்லிம்) என்று அவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

மேலும் ஒருவர் மரணித்ததன் பின்னரும் அவருக்குத் தொடர்ந்தும் நன்மையைப் பெற்றுத்தரும் அம்சங்கள் உள்ளன என்றும் "அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை, ஸதகா அல்ஜாரியா, பயனளிக்கும் அறிவு" ஆகிய மூன்றும் தான் அவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்)


இங்கும்கூட அவர்கள் மார்க்க அறிவு, உலகஅறிவு என்று பிரிக்காமல் 'பயனுள்ள அறிவு’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித சமூகத்தின் ஈருலக விமோசனத்துக்குத் தேவையானது என கருதப்படும் எந்தவொரு அறிவும் பயனுள்ளதாகவே அமையும். அது மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ உலக விவகாரங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருந்தாலும் சரியே. அந்த அனைத்து கல்வி ஞானங்களிலும் ஈடுபடுவதும் கற்பதும் கற்பிப்பதும் தவிர்க்க முடியாத 'பர்ளு கிபாயா'வாக அமையும். குர்ஆன், சுன்னா, பிக்ஹ், அகீதா, ஸீரா போன்ற மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் மிக்க உலமாக்களை உருவாக்குவது போலவே, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள் போன்ற உலக விவகாரங்களோடு தொடர்பான அறிவுகளில் ஆழமான அறிவு கொண்டவர்களை உருவாக்குவதும் 'பர்ளு கிபாயா'வாகவே கருதப்படும்.

முஹிப்புல் ஹக்
Read more »

நன்மைகளுடன் தீமைகளையும் தரும் நவீன தகவல் தொழில்நுட்பம்


தகவல் பரிமாற்றம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன தோன்றிய காலத்திலேயே இத்தகைய தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றது. ஓலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாகக் காணப்பட்டன.

இதனையடுத்து கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவை மூலமாகவும் இயல், இசை வாயிலாகவும் கருத்துகளைப் பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான்.அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் எனறு வளர்ந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தபால், தந்தி, தொலைபேசி என்று தகவல் தொடர்புசானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தன. இதன் முலம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது.

இன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செல்வாக்கின் விளைவாக உலகம் சிறிய குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்பத்தில் நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்வதற்கு வானொலிச் செய்திகளையும், பத்திரிகைகளையும் எதிர்பார்த்து நின்றோம். இன்று அந்நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும், உடனுக்குடன் நொடிப்பொழுதில் காலடிக்கு வந்து சேருகின்றன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் வேகமான சுற்றுகைக்கு ஈடுகொடுக்க மனிதன் பழக்கமடைந்து விட்டான். இத்தொழிநுட்பத்தால் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.

தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் மத்தியில் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.இன்று உலகமே தகவல் தொழிநுட்ப வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இவ்வாறான தகவல் தொடர்பாடல் வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மாணவர்களது கல்வியில் மாத்திரமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவுள்ளது. இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகளைக் கூட இதன் செல்வாக்கு விட்டுவைக்கவில்லை. இன்று பிள்ளைகள் இயற்கையில் விளையாடுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொலைபேசி மற்றும் ஏனைய நவீன சாதனங்களிலேயே அதிகம் விளையாடுகின்றனர். நவீன தொடர்புசாதனங்களின் வருகையின் விளைவாக எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றனவோ அதேயளவு பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. தீய விளைவுகளும் தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றன. ஆகவே பயன்படுத்தும் பயனராகிய நாம் அதனைப் பயன்படுத்துவதில் அதிக அவதானம் எடுத்துக் கொண்டு எமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல் சிறந்தது.
Read more »

தயக்கம், தாமதம் நல்லதல்ல!


இலங்கையின் பிரதான தேர்தலொன்று தொடர்பில், வடக்கு- கிழக்குத் தமிழர்கள் மத்தியில் இன்று உள்ளதைப் போன்ற திரிசங்கு நிலைமையொன்று கடந்த காலத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

ஜனாதிபதித் தேர்தலாகட்டும், இல்லையேல் பாராளுமன்ற பொதுத் தேர்தலாகட்டும்... வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் நிலைமை வேறுவிதமாகவே இருந்தது.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் உறுதியான நிலைப்பாடொன்று வந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் கடந்த காலத்தில் தேர்தல் நிலைப்பாடு பெரும்பாலும் சுயமானதாக இருந்ததில்லை.

விடுதலைப் புலிகள் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் புலிகளின் நிலைப்பாடுதான் தமிழர்களின் முடிவில் பிரதிபலித்தது. புலிகள் தங்களது நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் திணித்தனர் என்று கூட கூற முடியும். புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் ஒருபோதுமே சுயமான முடிவுக்கு வந்ததில்லை. புலிகள் அவ்வாறு அனுமதித்ததும் இல்லை. 2005 இல் வடக்கு மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்ததும் புலிகளின் தனிப்பட்ட முடிவுதான்.

புலிகள் இயக்கத்தின் முடிவுக்குப் பின்னர் காட்சிகள் மாற்றமடைந்தன. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்தது. புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியல் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பிடம் ‘முடிவெடுக்கும் பாத்திரம்’ தானாகப் போய்ச் சேர்ந்தது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே அங்குள்ள தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர். 2015ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையும், அதே வருடத்தில் ஓகஸ்ட் மாதம் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலையும் இதற்கான உதாரணங்களாகக் கூறலாம். தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்கு அமையவே அங்குள்ள தமிழர்கள் மைத்திரி_ ரணில் கூட்டணிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழர்களின் கடந்த கால முடிவை தவறென்று கூறுவதற்கில்லை. ஏனெனில் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினராவர். தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைந்து செல்ல வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கு இருந்தது. அதேசமயம், குறித்த சமூகமொன்றைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரதிநிதிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மாறிவரும் அரசியல் நிலைவரங்களுக்கேற்ப, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்குண்டு.

தமிழ்க் கூட்டமைப்பின் கடந்த காலத் தேர்தல் நிலைப்பாடுகளையும் தவறென்று கூற முடியாது. தமிழினத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆறு தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வருகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டி விடலாமென்று நம்பியுமே தமிழ்க் கூட்டமைப்பினர் காலத்துக்குக் காலம் வேறுபட்ட தேர்தல் நிலைப்பாடுகளுக்கு வந்திருந்தனர்.





தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு தமிழ் மக்கள் இசைந்து செயற்பட்டது தொடர்பாக ஏனைய இன மக்கள் கூட தமிழினத்தின் அரசியல் ஒற்றுமையை அன்று பாராட்டியிருந்தனர்.

இவையெல்லாம் எமது கடந்தகால அனுபவங்களாகும். தேர்தலொன்று அறிவிக்கப்பட்டவுடன் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டையே நாட்டின் ஒட்டுமொத்த சமூகங்களும் உற்று நோக்குவது வழமை. அம்மக்களின் முடிவை சர்வதேசம் கூட உற்று நோக்குவதுண்டு. அத்தேர்தல்களின் போதெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவும், தமிழர்களின் தீர்மானமும் வெவ்வேறானதாக இருந்ததில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்காகவே தமிழர்கள் காத்திருந்த காலமொன்றும் அன்றிருந்தது.

அன்றைய நிலைமையை இன்றைய தேர்தல் சூழலுடன் ஒப்பிட முடியாதிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் பன்னிரண்டு நாட்களே மீதமிருக்கின்றன.

இவ்வேளையில் தமிழரசுக் கட்சியிடமிருந்து உத்தியோகபூர்வமாக நேற்று முடிவு வெளியாகியுள்ளது.இது தமிழரசுக் கட்சியின் முடிவு. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு அல்ல. தமிழரசுக் கட்சியின் முடிவு மிகத் தாமதமாகவே வந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தேர்தல் தொடர்பாக வெளிப்படையான பிரதிபலிப்பைக் காண முடியாதிருக்கின்றது. தமிழர்களின் தேர்தல் களம் களையிழந்து போய்க் கிடக்கின்றது. அவர்களது தேர்தல் நிலைப்பாட்டை இன்னுமே உறுதியாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் முடிவு ஒருபுறமிருக்க, தேர்தல் தொடர்பான தமது உறுதியான நிலைப்பாட்டை தமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அரசியல் கடப்பாடும், தார்மிகப் பொறுப்பும் தமிழ்க் கூட்டமைப்புக்கு உண்டு. அதுவே அரசியல் அறம்!

தமிழ்க் கட்சிகள் இணைந்த பொதுஅமைப்பான தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுதான் இங்கு முக்கியம்.இப்பொறுப்பில் இருந்து தமிழ்க் கூட்டமைப்பினால் ஒருபோதுமே நழுவி விட முடியாது. அவ்வாறு நழுவிக் கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு முற்படுமானால், தமிழர்களின் ஏகபிரதிநிதிகளுக்கான பொறுப்பை அதன் தலைவர்கள் நிறைவேற்றத் தவறியுள்ளனர் என்றுதான் அர்த்தம்! அதேவேளை ஏகபிரதிநிதிகளென்று இனிமேல் கூறிக் கொள்வதிலும் அர்த்தம் இருக்கப் போவதில்லை.

தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமான செயற்பாடுகள் உசிதமானவையல்ல.ஒட்டுமொத்த தமிழ்க் கூட்டமைப்பின் முடிவை தாமதமின்றிஆணித்தரமாகக் கூற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமானது நழுவல் போக்காகுமென்று தமிழினம் சந்தேகம்கொள்ள இடமளிப்பது முறையல்ல!
Read more »

மாணவர்களை தண்டிப்பதில் ஆசிரியர்களின் வகிபாகம்

தவறு தப்பு தண்டனை போன்ற சொற்கள் பல சந்தர்ப்பங்களில் தவறாகவே கையாளப்படுகின்றது.  உண்மையில் இவற்றை நேர்மறையாக சிந்திக்கவும் செயல்படவும்  தவறிவிடுகிறோம்.

ஆசிரியர் பணி என்பது நுபுவத்தின் அந்தஸ்தை பிரதிபலிக்கின்றது. ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் தூண்கள். அவர்களை நம்பித்தான் மாணவர்கள் என்ற கட்டிடம் எழுப்பப்படுகின்றது. மாணவர்களை சரியாக நெறிப்படுத்தி பலப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனப்படுத்துகின்றார்கள், முடமாக்கின்றார்கள்.
 பல சந்தர்ப்பங்களில், மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கத்தில் ஆசிரியர்கள் செயற்பட்டாலும் அவர்களது அணுகுமுறைகளும்  வெளிப்பாடுகளும் நடத்தைகளும் மிகப் பிழையாக, பொருத்தமற்றதாக அமைவதனை  அவதானிக்கலாம்.

 மாணவர்கள் தவறு செய்வது, பிழை விடுவது  இயல்பானது, இயற்கையானது. அதுதான் கற்றலில் மிக ஆழமானதாகவும் அனுபவக் கற்றலாகவும் அமைந்துவிடுகின்றது. இதை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 ஆசிரியர்களே! ஆசிரியரான உங்களைப் போன்ற அறிவோ பக்குவமோ மாணவ சமூகத்திடம் கிடையாது. அதனால்தான் அவர்களை மாணவர்கள் என்று அழைக்கின்றோம்.

மாணவர்கள் தவறு செய்யும்போதும் பிழை விடும்போதும் கோபப்படுத்த கூடிய செயல்களை செய்யும் போதும் அவர்களை எவ்வாறு அணுகலாம், எவ்வாறான அணுகுமுறைகள் வெற்றியளிக்கும் என்பது தொடர்பாக இவ்வாக்கம் பேச முனைகிறது.

*1.மாணவர்களை புரிந்து கொள்ளுங்கள்*

 ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன். ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்துவமான ஆளுமை பண்புகள் இருக்கின்றது. ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தனித்துவமானவர்களோ  அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வளருகின்ற சூழல், அறிவுத் தரம், மனப்பாங்கு அனைத்தும் வித்தியாசப்பட்டிருக்கும். பாடசாலையை எடுத்துக்கொண்டால், ஆசிரியர் பாடத்திட்டத்துடன், கற்றலுடன் தனது செயற்பாட்டை சுருக்கி விடாமல் அந்த மாணவன், அவனுடைய  குடும்பப் பின்னணி குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அவருடைய தந்தை யார்? தாய் யார்? அவர்களின் கல்வித் தரம் என்ன? அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு எவ்வாறு இருக்கின்றது? குறித்த மாணவன் எவ்வாறு வளர்க்கப்படுகின்றான்? போன்ற வினாக்களுக்கு ஆசிரியர்கள் விடை தெரிந்திருக்க வேண்டும்.

 அதேபோன்று அந்த குடும்பத்தின் பொருளாதார பின்னணி குறித்தும் அறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் வறுமையில் வாடுகின்ற ஒரு மாணவனிடத்தில்  களவு இருப்பது இயற்கையானது. அவனுடைய வறுமை அவனுடைய ஆசைகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு தடையாக அமைகின்றது. ஆகவே அவருடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கான சந்தர்ப்பமாக அவன் களவெடுத்தலை நோக்குகின்றான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூட வறுமையிலிருந்தும் குஃப்ரிலிருந்தும் பாதுகாப்புத் தேடினார்கள். ஏனெனில் வருமை குஃப்ரிக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதனால்...

  குறித்த மாணவனின் அறிவுக்கூர்மை, மனப்பான்மை,  சகபாடிகள்  குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு தனது வகுப்பில் கற்கின்ற மாணவனின் தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார விடயங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிந்திருப்பது அந்த மாணவர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுக்கான சரியான காரணத்தை கண்டறியவும் காரணங்கள் மீண்டும் இடம் பெறாத வண்ணம் மீட்டெடுக்கவும் அந்த மாணவர்களை நல்வழிப் படுத்தவும் முடியுமாக இருக்கும்.

*2.அன்பு செலுத்துங்கள்*

 உலகை ஆளுவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அன்பு ஒன்றுதான். யாரெல்லாம் இந்த அன்பை ஆயுதமாக கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு முன்னால் அடிபணியாத எந்த சக்தியும் இருக்க முடியாது. மிகப்பெரிய வல்லரசுகளை எல்லாம் அன்பு என்ற ஆயுதம் வீழ்த்தி இருக்கின்றது.

 வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு புனிதமானது. அந்த அன்பு அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் பரிமாறப்பட வேண்டும். ஆசிரியர்கள் உள்ளத்தால் மாணவர்களை நேசிக்கவேண்டும். ஒவ்வொருவரையும் தன் சொந்த பிள்ளைகளாக பார்க்க வேண்டும். தான் மாணவர்களின் மீது உண்மையிலும் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணரச் செய்யவேண்டும்.  அவர்களை அழைத்து எதைக் கூறினாலும் அவர்களிடம் மறக்காமல்  *நான் உன்னை விரும்புகிறேன், உன் மீது கொண்ட அன்பின் காரணமாகவே இதை சொல்கிறேன்.*  என சொல்ல வேண்டும். அடிக்கடி, நாம் அவர்கள் மீது அன்பு வைத்து இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்கள் எமக்கு கீழ்படிந்து நடக்கின்ற தன்மை அதிகரிக்கும். நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் இந்த அன்பு ஒன்றுதான்.

*அன்பால் மாணவர்களை அடிமைப்படுத்துங்கள்; நாளைய உலகை அவர்கள் பண்பால் அலங்கரிப்பார்கள்.*

*3.தவறை சரியான வழிமுறையில் உணர்த்துங்கள்*

 மாணவர்கள் தவறு செய்வது இயல்பானதுதான். அந்த தவறை அவர்கள் அறியாது செய்யலாம், ஏன் சிலவேளை அறிந்தும் செய்யலாம் அதன் பாரதூரங்களை விளங்காதவரை. தவறுகளுக்காக நாங்கள் அவர்களை கண்டிக்கும் போது அவர்கள் செய்தது தவறுதான் என்பதை உணர்த்துவது பிரதானமானது. அவ்வாறு அவர்கள் உணரும் பட்சத்தில் அதுதான் அதற்கான  பரிகாரமாக அமைகின்றது.

ஆகவே தவறுகளை மிகச்சரியாக தவறுகள் என உணர்த்துங்கள். "அவைகள் எமக்கு பொருத்தமில்லை, எம்மை அசிங்கப்படுத்த கூடியவை" என்பதை மாணவர்கள் மிகத் தெளிவாக விளங்கும் வகையில் விளக்குவது ஆசிரியர்களின் கடமை.

*4.கவலை படுங்கள்: கோபப்படாதீர்கள்.*

 மாணவர்கள் தவறு செய்யும் போது பிழை விடும் போது கோபம் வருவது இயல்பானதுதான். ஆனாலும் பக்குவப்பட்ட ஆசிரியர்கள் அந்த இயல்புக்கு, அந்த உணர்வுக்கு இடம் வழங்க மாட்டார்கள்; அறிவுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறு உங்களை கவலை கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் செயலால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், வேதனைப்படுகிறீர்கள் என்பதனை அவர்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அவர்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள். *அவனுடைய வயது அவனது தவறை உணரச் செய்யாத சந்தர்ப்பங்களிலும் அவர்களின் மீது நீங்கள் கொண்ட அன்பும், அதன் காரணமாக உங்களிடம் வெளிப்படும் கவலையும் அவர்களின் மனங்களிலும் நடத்தையிலும் நல்ல மாறுதல்களை கொண்டுவரும்* அதற்கு மாற்றமாக அவர்களுடன் நீங்கள் கோபப்பட்டால் உங்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் வருவது இயல்பானது. இந்நிலையிலிருந்து ஆசிரியர் சமூகம் மீள வேண்டும்.  உங்களது கோபம் மாணவர்களை தண்டிக்கலாம், மாணவர்களை பயமுறுத்தலாம். ஆனால், தவறிலிருந்து அவர்களை பாதுகாக்காது. இரகசியமாக அந்த தவறுகளை மீண்டும் மீண்டும்  செய்யத்தூண்டும். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் கோபம் சைத்தானுக்கு உரியது என வர்ணித்தார்கள்.

 *5.மனம் விட்டு கதைக்கட்டும்.*

  நாம் மாணவர்களாக வாழ்ந்த சூழல் அல்ல இன்று இருப்பது. இன்றைய சூழலில் 95 வீதமானவைகள் மாணவர்களை நெறிதவற  செய்யக் கூடிய காரணிகளாகவே  அமைந்துள்ளது. இன்டர்நெட் பாவனை சமூக வலைதளங்கள் மேற்கத்திய கலாச்சார தாக்கம் என அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆகவே இத்தகைய மிகப்பெரிய சவால் மிக்க சூழலில் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்துவது என்பது ........

இத்தகைய சூழலில் மாணவர்கள் பார்ப்பவை கேட்பவை சகபாடிகளுடனான தொடர்பு என்பவற்றின் ஊடாக அதிகம் கற்கின்றார்கள். சரியாக வழிப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

மாணவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். நடைமுறை வாழ்வில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வாய் திறந்து கதைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை வழிநடத்துவது வெற்றி பெரும்.

  *மாணவர்கள் மனம் திறந்து ஆசிரியர்களுடன் கதைப்பது என்பது சாதாரணமாக நடந்து விட முடியாது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மீது நம்பிக்கை வரவேண்டும். இந்த ஆசிரியரை நம்பலாம், என்னுடைய விடயங்களை இவருடன் பரிமாறலாம், ரகசியங்களை அவர் பாதுகாப்பார், ஒரு பொழுதும் நான் கூறுகின்ற விடயங்களால் என்னை இழிவாக பார்க்கமாட்டார், யார் முன்னிலையிலும் இழிவு படுத்தவும் மாட்டார், என்னை  ஒதுக்கவும் மாட்டார், முறையாக எனக்கான வழிகாட்டல்களை தந்து அரவணைப்பார் என்று மாணவர்கள் உணரும்போதுதான் ஆசிரியர்களை தனது கௌரவ நண்பர்களாக எற்பார்கள்.*

ஆகவே உங்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்வில் சகல விடயங்களிலும் அவர்களை வழிநடத்தும் இடத்திற்கு நீங்கள் வரவேண்டும்.

 *6.அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்.*

உங்களது மாணவன் ஒருவர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் விரும்பத்தகாத வார்த்தைகளை உபயோகிக்கிறான் என்றால் மனதால் கவலைப்படுங்கள்.  இரண்டு ரக்அத் தொழுது விட்டு இரு கரம் ஏந்தி அவனுக்காக துவா செய்யுங்கள். அவன் செய்த தவறுக்கு நீங்கள் இஸ்திஹ்பார் செய்யுங்கள். இது பண்பட்ட ஆசிரியர்களின் அடையாளம். இதற்கான முன் மாதிரியை எங்கள் ஆசிரியர், இறுதித்தூதரிடம் அதிகமதிகமாய் கண்டுகொள்ளலாம்.

 ஆசிரியர்களே! உள்ளங்களுக்கு செந்தக்காரன் அல்லாஹ் என்பதை மறந்துவிடாதீர்கள்.

*7. துறை சார்ந்தவர்களை அணுகுங்கள்.*

  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மத்தியில் இன்றைய காலகட்டத்தில் பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள். அதனை எவ்வாறு அணுகுவது, கையாள்வது என்பதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து  செயல்படாமல் இத்துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவது இன்றியமையாதது. இல்லாதபட்சத்தில் அவ்வாசிரியர் விரக்திக்கும் ஒரு வகையான வெறுப்பு மனநிலைக்கும் ஆட்படுவது  தவிர்க்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள பாடசாலை அதிபர்களிடமெல்லாம் பணிவாய் வேண்டுவது ஒன்றைத்தான்
" உங்கள் பாடசாலையில் மாணவர் சார்ந்த பிரச்சினைகளை, ஒழுங்குகளை, தண்டனைகளை  அணுகுவதில் தண்டிப்பதில் எல்லா ஆசிரியர்களையும் ஈடுபடுத்த முனையாதீர்கள். இத்துறையில் நிதானித்து அனுபவம் மிக்க தொழில்வாண்மை பயிற்சிபெற்ற துறை சார்ந்தவர்களை கொண்டே இவற்றை  நடைமுறைப்படுத்துங்கள், அணுகுங்கள்.

சில ஆசிரியர்கள் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனமாக்கி, மூடமாக்கியுள்ளனர்.

 வளமான மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால்  ஆசிரியர் சமூகத்தை நெறிப்படுத்தி வழிகாட்டுதல்களை வழங்குவதிலும்  பாடசாலை அதிபர்கள் முன் நிற்க வேண்டும்.

இறுதியாய் ஒன்று சொல்கிறேன்; மறந்துவிடாதீர்கள்.

*உலகிற்கு  விளக்கேற்றிய தோமஸ் அல்வா எடிசன் என்ற மாணவனை முடமாக்கி பாடசாலையை விட்டு வெளியேற்றிய ஆசிரியர் இன்னும், இன்றும் பாடசாலையில் தான் இருக்கிறார்...*

*அவனை உலகம் போற்றும் மாணவனாக மாற்றி சாதனை படைத்த  அவன் தாயும் ஆசிரியராக நியமனம் பெறுகிறார்...*

 *நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எடிசன்கள் பாடசாலைகளில்...*

 நீங்கள் யார்?
 எடிசனின் ஆசிரியரா? சாதனை படைக்கப் போகும் எடிசனின் தாயா? 

 உங்கள் மாணவனை கேளுங்கள் நீங்கள் யாரென்று...

 *மிகச்சிறந்த  அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளமான மாணவர் சமூகம் தழைத்தோங்கும்*

 மிகச்சிறந்த ஆசிரியரையும் வளமான மாணவனையும் நீங்கள் காண நினைத்தால் இவ்வாகத்தை  பகிரலாமே...

அஷ்ஷேக் ஸஹீம் கமால் (இர்பானி)BA,
Dip in counseling (NISD)
 சிரேஷ்ட உளவளத்துணையாளர்
மேசி கல்வி வளாகம்
Read more »

ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய பதிவு தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...!

பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

 வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்
.
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

 குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

 குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!


Read more »

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!


நாட்டின் சில பிரதேசங்களில் தற்போது டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இதனை அவ்வப்பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருகை தரும் காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம் இந்நாட்டில் இந்நோய்க்கு உள்ளானோரதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துக் காணப்படுவதாக தொற்றுநோய்கள் பரவுதல் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, கடந்த வருடம் 51,169 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகினர். அவர்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையும் 56,833 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதோடு, 72 பேர் உயிரிழந்துமுள்ளனர். இதன்படி இந்நோய்க்கு உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் அதிகரித்திருப்பது தெளிவாகின்றது.

அதேநேரம் இவ்வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்கிடையில் இந்நோய்க்கு இவ்வளவு தொகையினர் இப்போதே உள்ளாகியிருப்பதும் உயிரிழந்திருப்பதும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், கடந்த சில வாரங்களாக தொடராக மழை பெய்து வருவதோடு நாட்டின் பல பிரதேசங்களின் தாழ்நிலங்களிலும் வெள்ள நி​ைலமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டெங்கு நோயைக் காவும் நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதற்கு பெருமளவிலான நீர் தேவைப்படுவதில்லை. மாறாக, வீட்டிலும் சுற்றாடலிலும் காணப்படுகின்ற அப்புறப்படுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பொலித்தீன் உறைகள் போன்ற பொருட்களில் தேங்கும் சொற்பளவு தெளிந்த நீரே போதுமானது.

அதன் காரணத்தினால் வீட்டிலும் சுற்றாடலிலும் மழைநீர் அடங்கலான தெளிந்தநீர் தேங்கக் கூடிய வகையில் எவ்வித பொருட்களும் காணப்படாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென தொற்றுநோய் பரவுவதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மழைநீர் தேங்கி நுளம்புகள் பெருகுவதற்குரிய வாய்ப்பைக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டெங்கு நோயானது, தனியே சுகாதாரப் பிரச்சினை அல்ல. அது சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சினையும் கூட. இதனை தனியே மருத்துவர்களால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக பொதுமக்களதும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

அந்தவகையில், இந்நோய்க்கு கடந்த வருடம் உள்ளானவர்களதும் உயிரிழந்தவர்களதும் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்ட போதிலும், அவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களில் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இவ்வருடம் ஏப்ரல் மாதம் தவிர்ந்த ஏனைய எல்லா மாதங்களிலும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

அதேநேரம் தற்போது தொடராகவும் அடிக்கடியும் மழை பெய்து வருவதானது டெங்கு நுளம்புகளின் பெருக்கத்துக்கும் டெங்கு நோய் மேலும் பரப்புவதற்கும் வாய்ப்பாக விளங்குகின்றது. அதன் காரணத்தினால் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட சிரட்டைகள், யோகட் கப்கள், சொப்பிங், பொலித்தீன் உள்ளிட்ட சகல திண்மக் கழிவுப் பொருட்களையும் தெளிந்தநீர் தேங்க முடியாதபடி அப்புறப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு குடிமகனும் விசேட கவனம் செலுத்தவேண்டும். அதனை ஒரு சமூகப் பொறுப்பாக கருதி செயற்படுவது அவசியமானது. அப்போது டெங்கு நுளம்புகள் பெருக முடியாத நிலைமை ஏற்படுவதோடு அது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆற்றுகின்ற நன்மையாகவும் அமையும்.

மேலும் இக்காலப் பகுதியில் எவருக்காவது காய்ச்சல், தலையிடி, உடல் வலி போன்றவாறான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்நோய்க்கு உள்ளானவர்களை ஆரம்ப கட்டத்திலேயே இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கும் போது இந்நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். அத்தோடு டெங்கானது முழுமையாக தவிர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு நோய் என்பதையும் மறந்து விட முடியாது.

ஆனால், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையாகவும் நடந்து கொள்வது நோய் தீவிரமடையவும், உயிராபத்துக்கு முகங்கொடுக்கவும் வழிவகுக்க முடியும். அதுவே மருத்துவர்களது அபிப்பிராயமாக உள்ளது.

ஆகவே, நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையிலான காலநிலை தற்போது நிலவி வருவதால் வீட்டையும் சுற்றாடலையும் மழைநீர் உள்ளிட்ட தெளிந்த நீர் தேங்காதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதனை ஒரு பொறுப்பாகவும் கருதி செயற்படுவது அவசியம். அப்போது டெங்கு நோய் ஒரு அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ இருக்காது என்பது திண்ணம்.
Read more »

10 ஆண்டுகளில் 13 ஆவது சம்பவம் 12 குழந்தைகளில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்பு


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13ஆவது ஆழ்துளை கிணறு விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. இவ்விபத்து திருச்சி மாவட்டத்தின் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் நடந்துள்ளது. சுமார் 400 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தையொன்று விழுந்துள்ளது.

தமிழக அரசும் உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

இதேபோன்று 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8ஆம் திகதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012ம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ஆம் திகதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ஆம் திகதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

2018ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.
Read more »

செவ்வாயில் உப்பு ஏரி


பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை கியுூரியோசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தப்புலத்தை இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு, அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »

தன்னை பற்றி சிந்திக்க வேண்டிய 'மனிதன்'

அண்டசராசரங்கள் அத்தனையையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருப்பவன் தான் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ். அவனது படைப்புக்களில் மலக்கு, ஜின், மனிதன் ஆகியன மிக முக்கியமானவை. அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தும் அவனை வணங்கி வழிபடுவதற்காகவும் புகழ்ந்து துதிப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளன. அந்தடிப்படையில் அனைத்து படைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை ஸுஜுது செய்த நிலையில் வணங்கி புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஜின்களும், மனிதனும் அல்லாஹ் வை வணங்கி வழிப்பட வேண்டியவர்கள். இதனை அல்லாஹ் தெளிவாகக் கூறி வைத்திருக்கின்றான்.

'ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்காகவன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை'.

(அல் குர்அன் 51:56)

இதன்படி ஜின்களும் மலக்குகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மிகவும் தெளிவானது. அல்லாஹ்வின் அந்த நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டியது இப்படைப்புக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்த படைப்புக்களில் மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை நெருப்பினாலும், மனிதனை மண்ணினாலும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். அதேநேரம் மனிதனுக்கு ஆறு கட்டங்களைக் கொண்ட வாழ்வொழுங்கையும் அவன் வழங்கியுள்ளான்.

அதாவது
1. ஆலமுல் அர்வாஹ்
2. தாயின் வயிறு
3. உலக வாழ்வு
4. கப்று வாழ்வு
5. மஹ்ஷர் மைதானம்
6. சுவர்க்கம் அல்லது நரகம்.

இவற்றில் உலக வாழ்வு கட்டம் மிகவும் முக்கியமானதும் பெறுமதி மிக்கதுமாகும். இது கெட்டியான உடலமைப்பையும் பகுத்தறிவையும், சுய தெரிவு சுதந்திரத்தையும் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள வாழ்வுக்கட்டமாகும். அதேநரம் இந்த உலக வாழ்வு கட்டத்தின் போது மலக்குகளையோ ஜின்களையோ மனிதனால் பார்க்கவோ தொட்டுணரவோ முடியாது. ஆனால் மலக்குகளும் ஜின்களும் மனிதனை பார்ப்பர்.

மேலும் அல்லாஹ்தஆலா தன் கரங்களால் படைத்த இம்மனிதனை மிகவும் அழகாகப் படைத்துள்ளான். இதனை அவன் தன் அருள்மறையாம் அல்குர்ஆனில், 'அத்தியின் மீதும், சைத்தூன் மீதும், அபயமளிக்கும் நகர் மீதும் சத்தியம் செய்து நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.' (அல் குர்ஆன் 95: 01 -– 04) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம் அல்லாஹ் மனிதனுக்கு நீண்ட நெடியதொரு வாழ்வுக்கட்டத்தை வழங்கியுள்ளான். அது தனியே உலக வாழ்வு கட்டத்தோடு மாத்திரம் முற்றுப்பெறுவதுமல்ல. வரையறுக்கப்பட்டதுமல்ல. ஆனால் மனிதன் பெற்றுக்கொண்டுள்ள நீண்ட வாழ்வில் உலக வாழ்வு கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்வு கட்டம் தவிர்ந்த வேறு எந்த வாழ்வுக்கட்டங்களிலும் பகுத்தறிவோ, தெரிவுச் சுதந்திரமோ, சுய இயங்குநிலையோ மனிதனுக்கு வழங்கப்படவில்லை. அதனால் இந்த உலக வாழ்வு கட்டத்தை மனிதன் உரிய முறைப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப நேரான பாதையில் தாம் படைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தை நோக்கி அவனால் பயணிக்க முடியும்.

இருப்பினும் தன் படைப்புக்களில் ஒன்றான மனிதனைப் பற்றியும் அல்லாஹ் நன்கறிந்தவனாவான். அதனால் அவன் மனிதனின் விமோசனத்திலும் சுபீட்சத்திலும் அதிக அக்கரையும் கருணையும் இரக்கமும் கொண்டிருக்கின்றான். அதனால் உலகில் மனிதன் வாழத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பூமியையே அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இதனை அவன் தன் அருள்மறையில், 'அவன் தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். (அல் குர்ஆன் 02:29) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதேநேரம், 'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களையும் ஏற்படுத்தினோம். (அல் குர்ஆன் 07:10) என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றான்.

அத்தோடு முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் காலத்திற்கு காலம் மனிதர்களில் இருந்து இறைத்தூதுவர்களை தெரிவு செய்து அவர்கள் ஊடாக மனிதனுக்குரிய நேர்வழிகாட்டல்களை உலகிற்கு அருளி அவன் வழிகாட்டி வந்தான். ஆனபோதிலும் ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் நடைமுறையில் இருந்து வந்த இந்நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழிகாட்டக்கூடிய அல் குர்அனை பிரதான மூலாதாரமாகக் கொண்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி அவன் நடைமுறைப்படுத்தி காட்டி வைத்திருக்கின்றான். அது உலகம் இருக்கும் வரையும் எல்லா கால, இட சூழலுக்கும் ஏற்ற வகையிலான உயிரோட்டம் மிக்க வாழ்க்கை நெறியாகவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே நேர்வழிகாட்டலாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு தன் படைப்பான மனிதனின் சுபீட்சம் விமோசனத்திற்காக ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஆதம் (அலை) அவர்களது அனைத்து சந்ததிகளதும் ஆன்மாகளையும் ஆலமுல் அர்வாஹ்வில் ஒன்று திரட்டினான். அங்கு, 'நான் உங்களது ரப் இல்லையா? என அல்லாஹ் வினவ 'ஏன் இல்லாமல் நீ தான் எங்கள் ரப்' என அவர்கள் கூற அவர்களையே (மனிதர்களை) சாட்சிகளாக ஆக்கி வைத்திருக்கின்றான்.

இதனை அவன் தன் அருள்மறையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

'நபியே..! உங்கள் இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று கேட்டத்திற்கு ஏன் இல்லை. நீ தான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம் என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டு பராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், (அல் குர்ஆன் 7:172)

இவ்வசனத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் தபரி (ரஹ்) அவர்கள் ஜுவைபிர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாவது, 'ளஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்) அவர்களது ஆறு நாள் மகன் இறந்துவிட்டார். அப்போது அவர் என்னிடம் ஜாபிரே..! என் மகனை அவரது குழியில் (கப்றில்) வைக்கும் போது அவரது முகத்தைத் திறந்து வையுங்கள். அவரது முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள். ஏனெனில் அவர் உட்கார வைக்கப்பட்டு கேட்கப்படுவார் என்று கூறினார்கள். நான் அவர் சொன்னபடியே செய்தேன்.

அடக்கம் முடிந்த பின்னர் அவரிடம் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக..! உங்கள் மகனிடம் எதைக் குறித்து கேட்கப்படும். அவரிடம் யார் கேள்வி கேட்பார்? என வினவினேன். அதற்கு அவர் ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி குறித்து கேட்கப்படும் என்று கூறினார்கள். அப்போது நான் அபுல் ஹாசிம் அவர்களே..! ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி எது? என வினவினேன். (அடுத்த வாரம் நிறைவுறும்)
Read more »