முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை நல்ல விசயம் மஹிந்த ஆப்பு வைத்துள்ளார் - கருணா

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இருபது வருடங்கள் ஆட்சியமைக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.


நேற்று மாலை வாழைச்சேனையில் நடைபெற்ற கல்குடாப் பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு அவர் மேலும்,


இந்த அரசாங்கம் தொடர்ந்தும் இருபது வருடங்கள் ஆட்சியமைக்கும் கோட்டாபய இம்முறை மட்டுமன்றி அடுத்த தடவையும் ஜனாதிபதியாக இருப்பார். அதற்கு அடுத்த தடவை வேறொருவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதியாக வருவார். அந்தளவிற்கு ரணில் அரசாங்கத்தினை மக்கள் வெறுத்துள்ளனர்.


ரணில், மைத்திரி அரசாங்கத்தினை கூடுதலாக வெறுத்தவர்கள் சிங்கள மக்கள். இலங்கை வரலாற்றில் இலங்கையை பாதாளத்தில் தள்ளியவர்கள் ரணில், மைத்திரி தான் என நான் நினைக்கின்றேன். இவர்களது ஆட்சியில் குண்டு வெடிப்பு, அழிப்பு, பொருளாதார சீர்கேடு, தற்கொலைகள் கூடுதலாக காணப்பட்டது.


இவ்வாறு பல பிரச்சினைகளை சந்தித்து விரக்தியடைந்த மக்கள் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்டு வந்துள்ளனர். இந்த அரசாங்கத்தினை திறம்பட மக்கள் பயன்படுத்த வேண்டும்.


முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை முடிவு செய்தது நான் தான்; மஹிந்தவும் இல்லை, கோட்டாபயவும் இல்லை என்று பத்திரிகையில் சரத்பொன்சேகா அறிக்கை விடுவார். அவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்களியுங்கள் என்று சம்பந்தன் கூறி வாக்கு போட்டார்கள் மக்கள். அடுத்த தேர்தலில் மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று சம்பந்தன் கூறினார். அதுவும் பிரயோசனம் இல்லை.


ஐந்து வருடமும் நாசமாக போயுள்ளது. கூடுதலான பெண்கள், ஆண்கள் கடன் தொல்லை மற்றும் வறுமை காரணமாக தூக்கில் தொங்கி இறந்து தான் மிச்சம். எந்த அபிவிருத்தியும் இல்லை, வேலை வாய்ப்பும் இடம்பெறவில்லை. வேலை வாய்ப்பு முழுவதும் மற்றைய சமூகத்திற்கு சென்றுவிட்டது.


கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெறும் 7 ஆசனங்களை மட்டுமே பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்கி விட்டு சம்பந்தன் நித்திரை செய்து விட்டார்.


இதன் காரணமாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. தமிழர்களுக்கு எந்தவித வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டவில்லை. தமிழ் பாடசாலைகளில் காவலாளிகள், அலுவலக உதவியாளர்களாக முஸ்லிம்கள் வேலை செய்கின்றார்கள். படித்த தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பு சம்பந்தரால் நாசம் செய்யப்பட்டது.


சிங்கள மக்கள் தனித்து கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெற வைக்கா விட்டால் அமீர் அலி உங்களுக்கு அடித்திருப்பார். நீங்கள் பாசிக்குடா கடலில் விழுந்திருப்பீர்கள், ஹிஸ்புல்லா அடித்திருப்பார் கல்லடி கடலில் விழுந்திருப்போம், றிஷாட் அடித்திருப்பார் மன்னாரில் விழுந்திருப்போம், ஹக்கீம் காலால் எட்டி உதைத்திருப்பார்.


இனத் துவேசம் பேசுகின்ற அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் சஜித்தோடு திரிகின்றனர். கடந்த காலத்தில் விட்ட தவறை இனி விடாமல் இருந்தால் தான் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். உரிமைக்காக கதைக்க முடியும். அபிவிருத்திகளை கொண்டு வர முடியும்.


அரசியல் என்பது மக்களின் எதிர்காலத்திற்கு தான். இப்போது நமது அரசியல்வாதிகள் வேட்டியை மடித்து கட்டி வெள்ளம் பார்த்து திரிகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கோடீஸ்வரன் மற்றும் முதலாளிமார்களாக கொண்டு வந்து விட்டு நாம் பிச்சைக்காரனாக உள்ளோம்.


இரண்டு தடவை நாடாளுமன்றம் சென்ற யோகேஸ்வரனுக்கு நான்கு கோடி ரூபாய் பேர்மிட் வழங்கப்பட்டுள்ளது. அதனை சுருட்டி விட்டார். அதை இவர் யாருக்கும் செலவு செய்யமாட்டார். துவிச்சக்கர வண்டிக்கும் வழியில்லாமல் இருந்தவர் தற்போது மூன்று வாகனத்துடன் சந்தோசமாக உள்ளார்.


நாங்கள் பாரிய ஆயுத்தை கொண்டு யுத்தம் செய்தும் நாட்டை தரவில்லை. சம்பந்தன் போய் கதைத்தா நாட்டை தரபோகின்றார்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவது. இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 60 விகிதத்திற்கு மேல் வாக்களிப்பதில்லை. ஆனால், முஸ்லிம்கள் 98 விகிதம் வாக்களிப்பார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 விகிதம் தமிழ், 25 விகிதம் முஸ்லிம். ஆனால் 75 விகிதத்திற்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் தான், 25 விகிதத்திற்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் தான், ஏனெனில் வாக்களிப்பு விகிதம் போதுமானதாக இல்லை.


இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கு சிறுபான்மை சமூகம் தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அதேபோன்ற நல்ல விடயம் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. மஹிந்தவிற்கு ஆப்பு வைத்ததால் மாறி மஹிந்த அவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளார்.


அதே போல, எமது தேர்தல் பிரச்சாரத்திற்கமைய கல்முனை பிரதேச செயலகத்தினை இம்முறை தரமுயர்த்துவோம் என்று கூறியுள்ளார்.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments:

Post a Comment