அவதானம் ! இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் !


கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சிறைக்கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்திலிருந்த 56 பேரும் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசணை வழங்கும் பெண் உத்தியோகஸ்தர் ஒருவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கடந்த 6 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலுள்ளவர்களும் வெலிக்கடை சிறைசாலையிலுள்ளவர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கமைய இன்று கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் 450 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இன்று காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்னொருவர் இனங்காணப்பட்டார். குறித்த பெண் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றியவராவார் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதியுடன் தொடர்புகளைப் பேணிய 600 இற்கும் மேற்பட்டோரை பி.சி.ஆர். பரிசோதனைக்க உட்படுத்துவதற்கும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த புதன்கிழமை முதல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நேற்று மாலை வரை 2151 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , அவர்களில் 1979 பேர் குணமடைந்துள்ளனர். அதே வேளை 104 பேர் தொடந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 Comments:

Post a Comment