நன்மைகளுடன் தீமைகளையும் தரும் நவீன தகவல் தொழில்நுட்பம்


தகவல் பரிமாற்றம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன தோன்றிய காலத்திலேயே இத்தகைய தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றது. ஓலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாகக் காணப்பட்டன.

இதனையடுத்து கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவை மூலமாகவும் இயல், இசை வாயிலாகவும் கருத்துகளைப் பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான்.அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் எனறு வளர்ந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தபால், தந்தி, தொலைபேசி என்று தகவல் தொடர்புசானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தன. இதன் முலம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது.

இன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செல்வாக்கின் விளைவாக உலகம் சிறிய குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்பத்தில் நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்வதற்கு வானொலிச் செய்திகளையும், பத்திரிகைகளையும் எதிர்பார்த்து நின்றோம். இன்று அந்நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும், உடனுக்குடன் நொடிப்பொழுதில் காலடிக்கு வந்து சேருகின்றன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் வேகமான சுற்றுகைக்கு ஈடுகொடுக்க மனிதன் பழக்கமடைந்து விட்டான். இத்தொழிநுட்பத்தால் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.

தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் மத்தியில் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.இன்று உலகமே தகவல் தொழிநுட்ப வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இவ்வாறான தகவல் தொடர்பாடல் வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மாணவர்களது கல்வியில் மாத்திரமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவுள்ளது. இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகளைக் கூட இதன் செல்வாக்கு விட்டுவைக்கவில்லை. இன்று பிள்ளைகள் இயற்கையில் விளையாடுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொலைபேசி மற்றும் ஏனைய நவீன சாதனங்களிலேயே அதிகம் விளையாடுகின்றனர். நவீன தொடர்புசாதனங்களின் வருகையின் விளைவாக எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றனவோ அதேயளவு பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. தீய விளைவுகளும் தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றன. ஆகவே பயன்படுத்தும் பயனராகிய நாம் அதனைப் பயன்படுத்துவதில் அதிக அவதானம் எடுத்துக் கொண்டு எமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல் சிறந்தது.