முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்கவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின்
அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்ஆனின் உண்மையான

போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம்.


இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம் இழந்து, தம்மிடமிருந்த அதிகாரம் அனைத்தும் இழந்து இஸ்லாத்தின் எதிரிகளிடம் தஞ்சமடையும் நிலை உருவாகியுள்ளது.


மறுபுறம், இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்ட தீயசக்திகள் முஸ்லிம்களின் பலவீனத்திலேயே அவர்களின் வல்லாதிக்கத்தை தொடர முடியுமென மிக நன்றாக அறிவர். எனவே அவர்கள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டுவதில் சளைக்காது, தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சதித் திட்டத்தில் சிக்கியுள்ள முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமையை உதாசீனம் செய்து சகோதர முஸ்லிம் நாடுகளுடன் சண்டையிட்டு அந்நாட்டு மக்களையும் வளங்களையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது வளங்களையும் அழித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இதனால் முழு இஸ்லாமிய உலகும் பலவீனமடைந்து காணப்படுகிறது.


ஐ.நா சபையில் பெரும் எண்ணிக்கை கொண்ட அங்கத்துவம் இஸ்லாமிய நாடுகளுக்கே உண்டு. இருந்தும் தமக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக செல்லாக்காசுகளாக சிதறிக் கிடக்கின்றன.


ஆனால் எந்தவொரு சமூகத்தினதும் வெற்றி அதன் உறுப்பினர்களிடையே உள்ள பரஸ்பர ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திலேயே பொதிந்துள்ளது. அதனால் அல்லாஹ் குர்ஆனில் “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள், - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து. அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்...”


(அல் குர்ஆன் 3:103).


புனித குர்ஆன் எமது ஒற்றுமையை வலியுறுத்தும் அதேசமயம் பிரிவினால் ஏற்படும் விளைவு பற்றியும் எமக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. “இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும்” (அல் குர்ஆன் 8:46)





இந்த புனித வசனங்களை நாம் பிரசங்கங்களில் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். சன்மார்க்க புத்தகங்களில் படித்துக் கொண்டும் இருக்கின்றோம். இருந்தும் முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்ட சமுதாயமாகவே உள்ளது. முஸ்லிம்களை ஷியா-சுன்னி என்று பிரித்து அவர்கள் ஒருவருக்கொருவர் மோத வைப்பதில் தீயசக்திகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இச்சதித்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசு முஸ்லிம் உலகை ஒன்றுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றது.


ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூரும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூருகின்றனர்.வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, ஒன்றுபடும் சந்தர்ப்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர்.


பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, லெபனான், யெமன், பஹ்ரைன், மத்திய ஆபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர், மியன்மார் மற்றும் இதுபோன்ற எத்தனையோ இடங்களில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்று வரும் அநியாயங்களை எண்ணி கவலைப்படுகிறோம், எமது பிரச்சினைகளுக்கு ஒற்றுமையால் தான் தீர்வு காண முடியும். பிரச்சினைகளின் மூல காரணங்களை அறிந்து, அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும்.


முஸ்லிம்கள் மத்தியில் எதிரும் புதிருமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பினரையும் போஷிக்கும் 'மறைகரம்', அனேகமாக, ஒன்றாகவே இருக்கும் என்பது சற்று ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா சுன்னிகள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்து வரும் அதேவேளை பிரித்தானியா ஷியாக்கள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்து வருகிறது. இதற்காக அவர்கள் கோடிக்கணக்கான டொலர்களை செலவிடுகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதே இவர்களது நோக்கம் ஆகும். துரதிர்ஷ்டம் என்னவென்றால் முஸ்லிம்களில் சில தரப்பினர் இவர்களது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்டு இருப்பதாகும்.


அதனால் தான் ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமேனி "அமெரிக்க - சியோனிச பிசாசுகளை துரத்தியடிக்கக் கூடியது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்க அமெரிக்கா சுன்னிகளைத் தூண்டுகிறது, பிரித்தானியா ஷியாக்களைத் தூண்டுகிறது. இரண்டுமே ஒரு கத்தரிக்கோலில் உள்ள இரண்டு கத்திகளை போன்றது " என்று குறிப்பிட்டிருக்கின்றார்.


ஆகவே இஸ்லாமிய நாடுகள் தம்மிடையே உள்ள பிணக்குகளை தாமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். முஸ்லிம் நாடுகள் மத்தியில் இவ்வாறான ஒரு சுமுகநிலை ஏற்படுமாயின், இஸ்லாமிய உலகு முகம் கொடுத்துள்ள ஏராளமான பிரச்சினைகளை இலகுவாக வெற்றி கொள்ளலாம். முஸ்லிம்கள் இழந்துள்ள செல்வாக்கையும் கண்ணியத்தையும், மிகக் குறுகிய காலத்துள் மீளப் பெறவும் முடியும்.


அதனால் முஸ்லிம்கள் அனைவரும் அவர்கள் சரியென்று ஏற்றுக் கொண்டுள்ள ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிகி, ஜாபரி, ஸைதி போன்ற அனைத்து சிந்தனை பள்ளிகள் அனைத்திற்கும் அடிப்படையான புனித குர்ஆன் மற்றும் ஹதீஸின் நிழலில் ஒன்றுபட வேண்டும். இதன் ஊடாக மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மரியாதை கொடுக்கும் பரந்த மனப்பான்மை உருவ வேண்டும். இந்தடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தவேண்டியது உலமாக்களினதும் முஸ்லிம் அறிவுஜீவிகளினதும் கடமையாகும்.