சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.



டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்காக பெரிதும் போராட்டிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ஓட்டத்துடனும், மாமதுல்லா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.



சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு - 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.