அமைச்சுகளுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யத்தடை
| December 04, 2019

ஜனாதிபதி கடுமையான உத்தரவு
எந்தவொரு அமைச்சும் புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்யக்கூடாது என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சுகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதை ஜனாதிபதி செயலகம் இடைநிறுத்தியுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிக்கான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அரசாங்க செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தென்னக்கோன் கூறினார். எந்தவொரு அமைச்சுக்கும் வாகனம் தேவைப்பட்டால் அதற்காக ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அவ்வாறு வாகனங்கள் தேவைப்படும் அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள வாகனங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தனது அரசாங்கத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தத்தமது அவசியமற்ற தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு சேவையாற்றவென அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரேயன்றி வாகனங்கள், போக்குவரத்து மற்றும் வசதிகள் உள்ளிட்ட ஆடம்பரங்களின் ஈடுபடுவதற்கல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.