கொழும்பு நகர வளிமண்டலத்தில தூசு

கொழும்பு நகரத்திற்கு மேலுள்ள வளிமண்டலத்தில் காணப்படும் தூசு துகள்களின் அளவு 100சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள, வளியின் தர கண்காணிப்பு கருவியின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை, வளி தர சுட்டி (AQI) 167என காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது இன்றையதினம் (06) முற்பகல் 8.30மணியளவில் 173ஆக மேலும் அதிகரித்து பதிவாகியுள்ளதோடு, முற்பகல் 10.00மணியளவில் 165ஆக காணப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிவிப்புக்கு அமைய, சாதாரணமான வளியின் தர சுட்டி 50ஆக காணப்பட வேண்டும் என்பதோடு, இது தற்போது 100வீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
புது டில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசுபாடு நிலைமை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக, சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி இது தொடர்பில் தெரிவித்தார்.
NBRO இனதும் அமெரிக்க தூதரகத்தினதும் வளி சுட்டி அளவிடும் கருவியில் நேற்று முதல் குறிப்பிடும்படியான மாற்றம் காணப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
விசேடமாக கொழும்பிற்கு மேலுள்ள வான் பரப்பில் நேற்று முதல் பனிமூட்டமான நிலை நிலவுகின்றதாகவும், இவ்வாறு காணப்படுவது தூசுத் துகள்கள் என, விஞ்ஞானி சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
Read more »

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.

“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.

இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.
Read more »

கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் சடலம்

குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Read more »

வட்ஸ்அப் இற்குள் சட்டவிரோத ஊடுருவல்!


இந்தியாவில் முக்கிய நபர்கள் உளவு பார்க்கப்பட்டனரா?
இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் முறைகேடு நடந்ததாக வெளிவரும் பரபரப்புத் தகவல்கள்
 எனது தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன 
இந்தியாவில் 'வட்ஸ்அப்பில்' சட்டவிரோதமாக ஊடுருவி ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை உளவு பார்த்ததாக பல்வேறு பரபரப்புத் தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. ஆனால் இது தொடர்பான முழு உண்மையும் இதுவரை வெளியிடப்படவில்லை.இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் இந்த முறைகேடான செயல் நடந்ததாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் 1.5 பில்லியன் மக்கள் 'வட்ஸ்அப்' பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஊடுருவல்கள் குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டவை என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ இது தொடர்பில் அளித்துள்ள விளக்கம் உண்மையாக இருந்தால், இந்திய அரசோ அல்லது அரசு நிறுவனங்கள் மட்டுமே 'பெகாசஸ்' மென்பொருளைப்
பயன்படுத்தி உளவு பார்க்க முடியும். இதற்கு அரசு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக நான்கு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 'வட்ஸ்அப்' நிறுவனத்தை இந்திய அரசாங்கம் கேட்டுள்ளது.
இஸ்ரேலிய நிறுவனம் ஒரு 'மொபைல் ஃபோன்' மூலம் வட்ஸ்அப்பின் அமைப்பை 'ஹேக்' செய்தது என்பது கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த மென்பொருளின் பயன்பாட்டில், ஒரு வைரஸ் ஸ்மார்ட் தொலைபேசியில் நுழைந்து தவற விட்ட அழைப்பு மூலம் அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது.
தொலைபேசியின் கமரா, அந்த நபர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார், அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரிக்கிறது.
இப்படி உளவு பார்ப்பதற்காக எயார்டெல், எம்.டி.என்.எல் உள்ளிட்ட இந்தியாவின் 8 மொபைல் வலைப்பின்னல்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி, 2018 ஜனவரி முதல் 2019 மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மக்களை உளவு பார்த்துள்ளது. இதற்காக இஸ்ரேலிய நிறுவனத்திடம் இழப்பீடு கோரி 'வட்ஸ்அப்' வழக்கு தொடுத்துள்ளது.
இதுபுறம் இருக்க இப்போது எழும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் இந்தியாவில் மொபைலில் ஹேக் செய்யப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்என்பதாகும்.
பில்லியன் கணக்கில் ஒரு உளவு நிறுவனம் வருவாய் ஈட்டும் என்றால், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களும், அதன் துணை நிறுவனங்களும் தங்களுடைய சேவையை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் தரவை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு இலாபம் ஈட்டும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.


சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட அரசு அல்லது அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தனது மென்பொருள் தகவல்களை வழங்குவதாக என்.எஸ்.ஓ கூறுகிறது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக உளவு பார்க்கவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவது தவறானது. அந்த சந்தேகத்தின் இலக்கு, இப்போது இந்திய அரசு மீது வந்துவிட்டது. அறிக்கையின்படி 10 சாதனங்களை ஹேக் செய்ய 4.61 கோடி ரூபாயும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு 3.55 கோடி ரூபாயும் செலவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
கேள்வி என்னவென்றால், இஸ்ரேலிய மென்பொருளின் மூலம் இந்தியர்களை உளவு பார்க்க கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டது எந்த இந்திய நிறுவனம்? அங்கீகரிக்கப்படாத மத்திய அரசு நிறுவனங்களால் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது இந்திய சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த உளவு வேலை செய்யப்பட்டிருந்தால், அது முழு நாட்டிற்குமே எச்சரிக்கை அடிக்கும் ஆபத்து மணி என்றே சொல்லலாம்.
இந்தியாவில், பாரம்பரிய தகவல் தொடர்பு அமைப்பு டெலிகிராஃப் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தொலைபேசி ஒட்டுக்கேட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஒரு வலுவான சட்ட அமைப்பை உருவாக்கியது, இது கடந்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மொபைல் மற்றும் இணையத்தின் புதிய அமைப்பில் பழைய சட்டங்கள் அர்த்தமற்றதாகி விட்டன என்பது வட்ஸ்அப் வழக்கில் இருந்து தெளிவாகிறது.
கடந்த தசாப்தத்தில், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பில்லியன் கணக்கான தரவுகளை உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் குற்றம் செய்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
NSO போன்ற இஸ்ரேலிய நிறுவனங்கள் டிஜிட்டல் அரங்கில் உளவு பார்க்க உதவுகின்றன.
அமெரிக்காவில், இணையம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பெரும்பாலானவை இஸ்ரேலின் யூத ​ெலாபியை வைத்திருக்கின்றன. பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், பல பயன்பாடுகள் மற்றும் தரவு தரகர்கள் மூலம் தரவின் வணிகத்தையும் உளவுத்துறையையும் வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய மத்திய அரசு தனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா
பானர்ஜி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் உள்ள பலரின் வட்ஸ்அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் என்.எஸ்.ஓ மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வட்ஸ்ஆப் நிறுவனம் கூறியிருக்கும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மம்தா பானர்ஜி.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிறகு முக்கியஸ்தர்களை மத்திய அரசு உளவு பார்த்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து என்.எஸ்.ஓ கருவியைப் பெற்று, மத்திய அரசு எனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டுள்ளது. அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.இது மிகவும் தவறானது. வட்ஸ்அப் பாதுகாப்பானதுதான். ஆனால் அதுவே இப்போது உங்களின் பேச்சுக்களையும், தகவல்களையும் உளவு பார்க்கிறது. லேண்ட்லைன், மொபைல் ஃபோன், வட்ஸ்அப் தகவல் என எதுவும் பாதுகாப்பானது இல்லை. அனைத்தும் உளவு பார்க்கப்படுகின்றன என்றால் அது தனியுரிமையை பாதிப்பதாகும். பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒன்று அல்லது 2 மாநில அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது. இப்போது அவர்கள் பெயரை என்னால் கூற முடியாது. ஆனால் அவர்கள் யார் என எனக்கு தெரியும். என்.எஸ்.ஓ கருவியால் 10 கி.மீ., தூரத்தில் உள்ள தொலைபேசி பேச்சுக்களையும் ஒட்டுக் கேட்க முடியும். இது குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார் அவர். (BBC,ONE INDIA TAMIL)
Read more »

50 முட்டைகளை உட்கொள்வதாக பந்தயம் கட்டியவருக்கு நேர்ந்த சோகம்!

உத்திர பிரதேசத்தில் 50 முட்டைகளை உட்கொள்வதற்காகப் பந்தயம் கட்டிய ஒருவர், 41ஆவது முட்டை உட்கொள்ளும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான சுபாஷ் யாதவ் என்பவர் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று அவரும், அவரது நண்பர் ஒருவரும் பிபிகஞ்ச் சந்தை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உட்கொள்ளச் சென்ற போது அவர்கள் இருவரும் முட்டை உட்கொண்ட போது அவர்களுக்குள் திடீரென முட்டை உட்கொள்வது தொடர்பாக கடும் விவாதம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 50 முட்டை உட்கொள்ள முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார்.அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 50 முட்டைகளை உட்கொண்டால் பரிசாக எவ்வளவு பணம் தருவாய் என்று கேட்டார்.

அதற்கு அவரது நண்பர் ஒரே நேரத்தில் இப்போதே 50 முட்டை உட்கொண்டு விட்டால் 2 ஆயிரம் ரூபா பரிசு தருவதாகத் தெரிவித்தார்.இதையடுத்து இந்த சவாலை சுபாஷ் ஏற்றுக்கொண்டு 50 முட்டைகளைக் கொண்டு வரும்படி கூறினார். 50 அவித்த முட்டைகள் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக சுபாஷ் உட்கொள் ஆரம்பித்தார்.40 முட்டைகளை அவர் அடுத்தடுத்து உட்கொண்டு தனது நண்பரை மிரள வைத்தார்.

ஆனால் 41ஆவது முட்டையை உண்ண ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41ஆவது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அவரை அந்த பகுதியிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கிருந்த வைத்தியர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி வைத்திய அறிவியல் கழகம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அதன்படி அந்த வைத்தியசாலைக்கு சுபாஷ் யாதவை கொண்டு சென்றனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி சுபாஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து வைத்தியர்கள், தெரிவிக்கையில், “முட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டமையால், அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது.

இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்” என்றனர்.குறித்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் பொலிஸில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read more »

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த பங்களாதேஷ்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.



டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணியின் வெற்றிக்காக பெரிதும் போராட்டிய முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ஓட்டத்துடனும், மாமதுல்லா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.



சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு - 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more »

மாணவர்களை தண்டிப்பதில் ஆசிரியர்களின் வகிபாகம்

தவறு தப்பு தண்டனை போன்ற சொற்கள் பல சந்தர்ப்பங்களில் தவறாகவே கையாளப்படுகின்றது.  உண்மையில் இவற்றை நேர்மறையாக சிந்திக்கவும் செயல்படவும்  தவறிவிடுகிறோம்.

ஆசிரியர் பணி என்பது நுபுவத்தின் அந்தஸ்தை பிரதிபலிக்கின்றது. ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் தூண்கள். அவர்களை நம்பித்தான் மாணவர்கள் என்ற கட்டிடம் எழுப்பப்படுகின்றது. மாணவர்களை சரியாக நெறிப்படுத்தி பலப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனப்படுத்துகின்றார்கள், முடமாக்கின்றார்கள்.
 பல சந்தர்ப்பங்களில், மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கத்தில் ஆசிரியர்கள் செயற்பட்டாலும் அவர்களது அணுகுமுறைகளும்  வெளிப்பாடுகளும் நடத்தைகளும் மிகப் பிழையாக, பொருத்தமற்றதாக அமைவதனை  அவதானிக்கலாம்.

 மாணவர்கள் தவறு செய்வது, பிழை விடுவது  இயல்பானது, இயற்கையானது. அதுதான் கற்றலில் மிக ஆழமானதாகவும் அனுபவக் கற்றலாகவும் அமைந்துவிடுகின்றது. இதை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

 ஆசிரியர்களே! ஆசிரியரான உங்களைப் போன்ற அறிவோ பக்குவமோ மாணவ சமூகத்திடம் கிடையாது. அதனால்தான் அவர்களை மாணவர்கள் என்று அழைக்கின்றோம்.

மாணவர்கள் தவறு செய்யும்போதும் பிழை விடும்போதும் கோபப்படுத்த கூடிய செயல்களை செய்யும் போதும் அவர்களை எவ்வாறு அணுகலாம், எவ்வாறான அணுகுமுறைகள் வெற்றியளிக்கும் என்பது தொடர்பாக இவ்வாக்கம் பேச முனைகிறது.

*1.மாணவர்களை புரிந்து கொள்ளுங்கள்*

 ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன். ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்துவமான ஆளுமை பண்புகள் இருக்கின்றது. ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பார்க்க முடியாது. மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தனித்துவமானவர்களோ  அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வளருகின்ற சூழல், அறிவுத் தரம், மனப்பாங்கு அனைத்தும் வித்தியாசப்பட்டிருக்கும். பாடசாலையை எடுத்துக்கொண்டால், ஆசிரியர் பாடத்திட்டத்துடன், கற்றலுடன் தனது செயற்பாட்டை சுருக்கி விடாமல் அந்த மாணவன், அவனுடைய  குடும்பப் பின்னணி குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அவருடைய தந்தை யார்? தாய் யார்? அவர்களின் கல்வித் தரம் என்ன? அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு எவ்வாறு இருக்கின்றது? குறித்த மாணவன் எவ்வாறு வளர்க்கப்படுகின்றான்? போன்ற வினாக்களுக்கு ஆசிரியர்கள் விடை தெரிந்திருக்க வேண்டும்.

 அதேபோன்று அந்த குடும்பத்தின் பொருளாதார பின்னணி குறித்தும் அறிந்திருக்கவேண்டும். ஏனென்றால் வறுமையில் வாடுகின்ற ஒரு மாணவனிடத்தில்  களவு இருப்பது இயற்கையானது. அவனுடைய வறுமை அவனுடைய ஆசைகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு தடையாக அமைகின்றது. ஆகவே அவருடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கான சந்தர்ப்பமாக அவன் களவெடுத்தலை நோக்குகின்றான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூட வறுமையிலிருந்தும் குஃப்ரிலிருந்தும் பாதுகாப்புத் தேடினார்கள். ஏனெனில் வருமை குஃப்ரிக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதனால்...

  குறித்த மாணவனின் அறிவுக்கூர்மை, மனப்பான்மை,  சகபாடிகள்  குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு தனது வகுப்பில் கற்கின்ற மாணவனின் தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார விடயங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிந்திருப்பது அந்த மாணவர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுக்கான சரியான காரணத்தை கண்டறியவும் காரணங்கள் மீண்டும் இடம் பெறாத வண்ணம் மீட்டெடுக்கவும் அந்த மாணவர்களை நல்வழிப் படுத்தவும் முடியுமாக இருக்கும்.

*2.அன்பு செலுத்துங்கள்*

 உலகை ஆளுவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அன்பு ஒன்றுதான். யாரெல்லாம் இந்த அன்பை ஆயுதமாக கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு முன்னால் அடிபணியாத எந்த சக்தியும் இருக்க முடியாது. மிகப்பெரிய வல்லரசுகளை எல்லாம் அன்பு என்ற ஆயுதம் வீழ்த்தி இருக்கின்றது.

 வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு புனிதமானது. அந்த அன்பு அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் பரிமாறப்பட வேண்டும். ஆசிரியர்கள் உள்ளத்தால் மாணவர்களை நேசிக்கவேண்டும். ஒவ்வொருவரையும் தன் சொந்த பிள்ளைகளாக பார்க்க வேண்டும். தான் மாணவர்களின் மீது உண்மையிலும் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணரச் செய்யவேண்டும்.  அவர்களை அழைத்து எதைக் கூறினாலும் அவர்களிடம் மறக்காமல்  *நான் உன்னை விரும்புகிறேன், உன் மீது கொண்ட அன்பின் காரணமாகவே இதை சொல்கிறேன்.*  என சொல்ல வேண்டும். அடிக்கடி, நாம் அவர்கள் மீது அன்பு வைத்து இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்கள் எமக்கு கீழ்படிந்து நடக்கின்ற தன்மை அதிகரிக்கும். நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் இந்த அன்பு ஒன்றுதான்.

*அன்பால் மாணவர்களை அடிமைப்படுத்துங்கள்; நாளைய உலகை அவர்கள் பண்பால் அலங்கரிப்பார்கள்.*

*3.தவறை சரியான வழிமுறையில் உணர்த்துங்கள்*

 மாணவர்கள் தவறு செய்வது இயல்பானதுதான். அந்த தவறை அவர்கள் அறியாது செய்யலாம், ஏன் சிலவேளை அறிந்தும் செய்யலாம் அதன் பாரதூரங்களை விளங்காதவரை. தவறுகளுக்காக நாங்கள் அவர்களை கண்டிக்கும் போது அவர்கள் செய்தது தவறுதான் என்பதை உணர்த்துவது பிரதானமானது. அவ்வாறு அவர்கள் உணரும் பட்சத்தில் அதுதான் அதற்கான  பரிகாரமாக அமைகின்றது.

ஆகவே தவறுகளை மிகச்சரியாக தவறுகள் என உணர்த்துங்கள். "அவைகள் எமக்கு பொருத்தமில்லை, எம்மை அசிங்கப்படுத்த கூடியவை" என்பதை மாணவர்கள் மிகத் தெளிவாக விளங்கும் வகையில் விளக்குவது ஆசிரியர்களின் கடமை.

*4.கவலை படுங்கள்: கோபப்படாதீர்கள்.*

 மாணவர்கள் தவறு செய்யும் போது பிழை விடும் போது கோபம் வருவது இயல்பானதுதான். ஆனாலும் பக்குவப்பட்ட ஆசிரியர்கள் அந்த இயல்புக்கு, அந்த உணர்வுக்கு இடம் வழங்க மாட்டார்கள்; அறிவுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறு உங்களை கவலை கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் செயலால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், வேதனைப்படுகிறீர்கள் என்பதனை அவர்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அவர்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள். *அவனுடைய வயது அவனது தவறை உணரச் செய்யாத சந்தர்ப்பங்களிலும் அவர்களின் மீது நீங்கள் கொண்ட அன்பும், அதன் காரணமாக உங்களிடம் வெளிப்படும் கவலையும் அவர்களின் மனங்களிலும் நடத்தையிலும் நல்ல மாறுதல்களை கொண்டுவரும்* அதற்கு மாற்றமாக அவர்களுடன் நீங்கள் கோபப்பட்டால் உங்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் வருவது இயல்பானது. இந்நிலையிலிருந்து ஆசிரியர் சமூகம் மீள வேண்டும்.  உங்களது கோபம் மாணவர்களை தண்டிக்கலாம், மாணவர்களை பயமுறுத்தலாம். ஆனால், தவறிலிருந்து அவர்களை பாதுகாக்காது. இரகசியமாக அந்த தவறுகளை மீண்டும் மீண்டும்  செய்யத்தூண்டும். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் கோபம் சைத்தானுக்கு உரியது என வர்ணித்தார்கள்.

 *5.மனம் விட்டு கதைக்கட்டும்.*

  நாம் மாணவர்களாக வாழ்ந்த சூழல் அல்ல இன்று இருப்பது. இன்றைய சூழலில் 95 வீதமானவைகள் மாணவர்களை நெறிதவற  செய்யக் கூடிய காரணிகளாகவே  அமைந்துள்ளது. இன்டர்நெட் பாவனை சமூக வலைதளங்கள் மேற்கத்திய கலாச்சார தாக்கம் என அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆகவே இத்தகைய மிகப்பெரிய சவால் மிக்க சூழலில் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்துவது என்பது ........

இத்தகைய சூழலில் மாணவர்கள் பார்ப்பவை கேட்பவை சகபாடிகளுடனான தொடர்பு என்பவற்றின் ஊடாக அதிகம் கற்கின்றார்கள். சரியாக வழிப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

மாணவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். நடைமுறை வாழ்வில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வாய் திறந்து கதைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை வழிநடத்துவது வெற்றி பெரும்.

  *மாணவர்கள் மனம் திறந்து ஆசிரியர்களுடன் கதைப்பது என்பது சாதாரணமாக நடந்து விட முடியாது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மீது நம்பிக்கை வரவேண்டும். இந்த ஆசிரியரை நம்பலாம், என்னுடைய விடயங்களை இவருடன் பரிமாறலாம், ரகசியங்களை அவர் பாதுகாப்பார், ஒரு பொழுதும் நான் கூறுகின்ற விடயங்களால் என்னை இழிவாக பார்க்கமாட்டார், யார் முன்னிலையிலும் இழிவு படுத்தவும் மாட்டார், என்னை  ஒதுக்கவும் மாட்டார், முறையாக எனக்கான வழிகாட்டல்களை தந்து அரவணைப்பார் என்று மாணவர்கள் உணரும்போதுதான் ஆசிரியர்களை தனது கௌரவ நண்பர்களாக எற்பார்கள்.*

ஆகவே உங்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்வில் சகல விடயங்களிலும் அவர்களை வழிநடத்தும் இடத்திற்கு நீங்கள் வரவேண்டும்.

 *6.அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்.*

உங்களது மாணவன் ஒருவர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் விரும்பத்தகாத வார்த்தைகளை உபயோகிக்கிறான் என்றால் மனதால் கவலைப்படுங்கள்.  இரண்டு ரக்அத் தொழுது விட்டு இரு கரம் ஏந்தி அவனுக்காக துவா செய்யுங்கள். அவன் செய்த தவறுக்கு நீங்கள் இஸ்திஹ்பார் செய்யுங்கள். இது பண்பட்ட ஆசிரியர்களின் அடையாளம். இதற்கான முன் மாதிரியை எங்கள் ஆசிரியர், இறுதித்தூதரிடம் அதிகமதிகமாய் கண்டுகொள்ளலாம்.

 ஆசிரியர்களே! உள்ளங்களுக்கு செந்தக்காரன் அல்லாஹ் என்பதை மறந்துவிடாதீர்கள்.

*7. துறை சார்ந்தவர்களை அணுகுங்கள்.*

  ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மத்தியில் இன்றைய காலகட்டத்தில் பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள். அதனை எவ்வாறு அணுகுவது, கையாள்வது என்பதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து  செயல்படாமல் இத்துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவது இன்றியமையாதது. இல்லாதபட்சத்தில் அவ்வாசிரியர் விரக்திக்கும் ஒரு வகையான வெறுப்பு மனநிலைக்கும் ஆட்படுவது  தவிர்க்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள பாடசாலை அதிபர்களிடமெல்லாம் பணிவாய் வேண்டுவது ஒன்றைத்தான்
" உங்கள் பாடசாலையில் மாணவர் சார்ந்த பிரச்சினைகளை, ஒழுங்குகளை, தண்டனைகளை  அணுகுவதில் தண்டிப்பதில் எல்லா ஆசிரியர்களையும் ஈடுபடுத்த முனையாதீர்கள். இத்துறையில் நிதானித்து அனுபவம் மிக்க தொழில்வாண்மை பயிற்சிபெற்ற துறை சார்ந்தவர்களை கொண்டே இவற்றை  நடைமுறைப்படுத்துங்கள், அணுகுங்கள்.

சில ஆசிரியர்கள் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் ஊனமாக்கி, மூடமாக்கியுள்ளனர்.

 வளமான மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால்  ஆசிரியர் சமூகத்தை நெறிப்படுத்தி வழிகாட்டுதல்களை வழங்குவதிலும்  பாடசாலை அதிபர்கள் முன் நிற்க வேண்டும்.

இறுதியாய் ஒன்று சொல்கிறேன்; மறந்துவிடாதீர்கள்.

*உலகிற்கு  விளக்கேற்றிய தோமஸ் அல்வா எடிசன் என்ற மாணவனை முடமாக்கி பாடசாலையை விட்டு வெளியேற்றிய ஆசிரியர் இன்னும், இன்றும் பாடசாலையில் தான் இருக்கிறார்...*

*அவனை உலகம் போற்றும் மாணவனாக மாற்றி சாதனை படைத்த  அவன் தாயும் ஆசிரியராக நியமனம் பெறுகிறார்...*

 *நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எடிசன்கள் பாடசாலைகளில்...*

 நீங்கள் யார்?
 எடிசனின் ஆசிரியரா? சாதனை படைக்கப் போகும் எடிசனின் தாயா? 

 உங்கள் மாணவனை கேளுங்கள் நீங்கள் யாரென்று...

 *மிகச்சிறந்த  அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளமான மாணவர் சமூகம் தழைத்தோங்கும்*

 மிகச்சிறந்த ஆசிரியரையும் வளமான மாணவனையும் நீங்கள் காண நினைத்தால் இவ்வாகத்தை  பகிரலாமே...

அஷ்ஷேக் ஸஹீம் கமால் (இர்பானி)BA,
Dip in counseling (NISD)
 சிரேஷ்ட உளவளத்துணையாளர்
மேசி கல்வி வளாகம்
Read more »

இமதுவ பகுதியில் முச்சக்கர வண்டி - லாரி விபத்து. இரு பெண்கள் உயிரிழப்பு ( ஏ எஸ் பாத்திமா , பாத்திமா சித்ரி) 7 பேர் படுகாயம்.


நேற்று மாலை 7 மணி அளவில் இமதுவ பொலிஸ் பிரிவில் காலி - அக்குரஸ்ஸ வீதியில் அங்குழுகஹ
சந்தி அருகில் காலி நோக்கி பயணித்த இலங்கை மின்சார சபையின் லாரி மற்றும் எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர் ஏ எஸ் பாத்திமா வயது 68 யக்கஸ்முல்ல - வீரகெட்டிய

மற்றவர் பாத்திமா சித்ரி 32 வயது யக்கஸ்முல்ல - வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்து ஏற்படும்போது முச்சக்கரவண்டியில் மூன்று பெண்கள் ஒரு ஆண் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.
Read more »

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் , போன்கள் வழங்க வேண்டாம் - பொலிஸார் வேண்டுகோள்

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார் .

 ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கூறுகையில் , தற்போது பாடசாலை செல்லும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் . பாடசாலை சென்ற பின்னரும் , தனியார் வகுப்புக்களுக்கு சென்ற பின்னரும் அவர்கள் செய்யும் விடயங்கள் , செல்லும் இடங்கள் தொடர்பில் பெற்றோர் - . விழிப்புடன் இருக்க வேண்டும் . ஸ்மார்ட் போன்களை பிள்ளைகள் பயன்படுத்துவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . இன்று அதிகமான பாடசாலை மாணவ , மாணவியர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் . முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர் .

 இவ்வாறான சம்பவங்களுக்கு பிள்ளைகளின் பெற்றோரே பொறுப்பு சொல்ல வேண்டும் . பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூட செல்லிடப்பேசிகள் வழியமைக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார் .
Read more »

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் வெலிகமை சேர்ந்த ரிஸான் மௌலானா வபாத்.


மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் வபாத் ஆகியுள்ளார் .மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற  பிரதேசத்திற்கு  இவர்கள் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர்கள் சென்ற கார் ஓடையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இரண்டு பேரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் கண்ணந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார் மற்றும் களுத்துரை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர்
 மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மவ்லானா என்பவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Read more »

வெலிகம வலான வைத்தியசாலைக்கு பழைய தெரு , மீரா ஸாஹிப் பள்ளிவாசல் மர்கஸ் நிர்வாகத்தினரால்100 LED மின்குமிழ்கள் அன்பளிப்பு

வெலிகம பழைய தெரு , மீரா ஸாஹிப் பள்ளிவாசல் மர்கஸ் நிர்வாகத்தினரால் வெலிகம வலான வைத்தியசாலைக்கு 100 LED மின் குமிழ்கள் கொண்ட பொதி அன்பளிப்பு செய்யப்பட்டது . இதனை பள்ளிவாசல் கதீப் அஷ்ஷெய்க் எம் . எம் . எம் . நாஜிஹ் ( முர்ஸி ) , வைத்தியர் சமரசேகரவிடம் கையளித்தார் . இந்நிகழ்வில் பௌத்த மதகுருவான செவனகல தம்மிக தேரர் , கிறிஸ்தவ மத குருவான பெரேரா மற்றும் பொலிஸ் அதிகாரி மாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர் .
Read more »